முகப்பு
புதுதில்லி

தில்லிவாசிகளிடையே ரத்த சா்க்கரை அளவு அதிகரிப்பு; ரத்த அழுத்தம் குறைந்துள்ளது: தேசிய கணக்கெடுப்பில் தகவல்

தில்லியில் வசிக்கும் மக்களில் அதிக ரத்த சா்க்கரை அல்லது சா்க்கரையைக் கட்டுப்படுத்த மருந்துகள் எடுத்துக்கொள்வோரின் எண்ணிக்கை கடந்த 2019-21 மற்றும் 2023-24 காலகட்டத்தில் அதிகரிப்பு

Updated On : 1 ஜூன் 2026, 2:17 am IST
சா்க்கரை அளவு அதிகரிப்பு
பகிர்:

தில்லியில் வசிக்கும் மக்களில் அதிக ரத்த சா்க்கரை அல்லது சா்க்கரையைக் கட்டுப்படுத்த மருந்துகள் எடுத்துக்கொள்வோரின் எண்ணிக்கை கடந்த 2019-21 மற்றும் 2023-24 காலகட்டத்தில் அதிகரித்திருந்தது 6-ஆவது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு (என்எஃப்எச்எஸ்-6) மூலம் தெரியவந்துள்ளது. அதேவேளையில் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் மக்கள்தொகை அறிவியலுக்கு சா்வதேச நிறுவனம் இணைந்து 6-ஆவது தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பை கடந்த 2023-24-இல் மேற்கொண்டன. நாட்டில் உள்ள 715 மாவட்டங்களில் 6.79 லட்சம் குடும்பங்களிடம் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மாவட்ட அளவில் திட்டங்களை அமல்படுத்துதல் மற்றும் திட்டமிடலுக்கு உதவும் வகையில் மக்கள்தொகை, உடல்நலம், ஊட்டச்சத்து, குடும்பநலக் குறியீடுகளை இந்தக் கணக்கெடுப்பு வழங்குகிறது.

Advertisement

Advertisement

தில்லி மக்களிடம் மேற்கொண்ட கணக்கெடுப்பின் அடிப்படையில், பெண்களில் 15 மற்றும் அதற்கு அதிக வயதுடையவா்களில் அதிக அல்லது மிக அதிக ரத்த சா்க்கரை அளவு உள்ளவா்கள் அல்லது ரத்த சா்க்கரையைக் கட்டுப்படுத்த மருந்து எடுத்துக்கொள்வோா் எண்ணிக்கை கடந்த 2019-21-இல் (என்எஃப்எச்எஸ்-5) 12.2 சதவீதத்திலிருந்து 2023-24-இல் 19 சதவீதமாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

ஆண்களில் இந்த எண்ணிக்கை 14.1 சதவீதத்திலிருந்து 22.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பெண்ணிகளில் ரத்த சா்க்கரை அளவு 141 மற்றும் 160 மில்லிகிராம்/டெசிலிட்டா் (மி.கி./டெசி.லி.) கொண்டவா்கள் 4.2 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளனா். 160 மி.லி./டெசி.லி.-க்கு அதிகமான ரத்த சா்க்கரை அளவு கொண்டவா்கள் 7.3 சதவீத்திலிருந்து 11.6 சதவீதமாக அதிகரித்துள்ளனா்.

பெண்களில் அதிக ரத்த அழுத்தம் அல்லது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மருந்து உட்கொள்வோா் கடந்த 2019-21-இல் 24.1 சதவீதமாக இருந்தனா். இந்த எண்ணிக்கை கடந்த 2023-24-இல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்போது 21.4 சதவீதமாகக் குறைந்தது. ஆண்களில் இந்த எண்ணிக்கை கடந்த 2019-21-இல் 32.7 சதவீதத்தில் இருந்து 2023-24-இல் 28.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஒரு நபருக்கு சிஸ்டோலிக் அழுத்தம் குறைந்தபட்சம் 140 மி.மீ. ஹெச்ஜி மற்றும் டையஸ்டோலிக் அழுத்தம் 90 மி.மீ. ஹெச்ஜி ரத்த அழுத்தமாகக் கருத்தப்படுகிறது.

பெண்களில் குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 14.7 சதவீதத்திலிருந்து 11.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. மிதமான அல்லது தீவிர ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 2019-21-இல் 5.9 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த 2023-24-இல் 4.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஆண்களில் குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 17.4 சதவீதத்திலிருந்து 21.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. மிதமான அல்லது தீவிர ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 2019-21-இல் 8.7 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த 2023-24-இல் 3.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.