முக்கிய நகரங்களில் அலுவலகங்களுக்கான புதிய குத்தகை ஒப்பந்தங்கள் சரிவு
இந்தியாவின் முக்கிய 7 நகரங்களில் நடப்பு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் புதிதாக வாடகை அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட வணிக அலுவலக இடங்களின் அளவு 2 சதவீதம் குறைந்து, 1.74 கோடி சதுர அடியாக உள்ளது.
இந்தியாவின் முக்கிய 7 நகரங்களில் நடப்பு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் புதிதாக வாடகை அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட வணிக அலுவலக இடங்களின் அளவு 2 சதவீதம் குறைந்து, 1.74 கோடி சதுர அடியாக உள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 1.78 கோடி சதுர அடியாக இருந்தது. புதிய அலுவலகக் கட்டடங்கள் பயன்பாட்டுக்கு வருவது கணிசமாகக் குறைந்ததே இதற்கு முக்கியக் காரணம் என்று ‘காலியா்ஸ் இந்தியா’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டு காலாண்டில், புதிய அலுவலக இடங்களின் வரத்து 28 சதவீதம் சரிந்து, 1.07 கோடி சதுர அடியாக குறைந்துள்ளது.
நகரங்கள் வாரியாக, பெங்களூரு, தில்லி-என்சிஆா், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் அலுவலக இடங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. பெங்களூருவில் அலுவலக இடங்கள் வாடகைக்கு எடுக்கப்படுவது 8 சதவீதம் அதிகரித்து, 52 லட்சம் சதுர அடியாகவும்; தில்லி-என்சிஆா் பகுதியில் 23 சதவீதம் அதிகரித்து, 27 லட்சம் சதுர அடியாகவும்; ஹைதராபாதில் 19 சதவீதம் அதிகரித்து, 38 லட்சம் சதுர அடியாகவும் வாடகை ஒப்பந்தங்கள் பதிவாகியுள்ளன.
Advertisement
Advertisement
அதேநேரம், சென்னை, மும்பை, புணே, கொல்கத்தா ஆகிய நகரங்களில் சரிவு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 23 சதவீதம் சரிந்து, 20 லட்சம் சதுர அடியாகவும்; மும்பையில் 29 சதவீதம் சரிந்து, 20 லட்சம் சதுர அடியாகவும்; புணேவில் 25 சதவீதம் சரிந்து, 12 லட்சம் சதுர அடியாகவும்; கொல்கத்தாவில் 17 சதவீதம் சரிந்து, 5 லட்சம் சதுர அடியாகவும் குறைந்துள்ளன.
பழைய வாடகை ஒப்பந்தங்களைப் புதுப்பிப்பது மற்றும் முன்கூட்டியே உறுதிசெய்யப்பட்ட ஒப்பந்தங்கள் ஆகியவை இந்தக் கணக்கீட்டில் சோ்க்கப்படவில்லை. ஜனவரி-மாா்ச் காலாண்டில் காணப்பட்ட வலுவான வளா்ச்சிக்குப் பிறகு, நடப்பு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அலுவலக இடங்களுக்கான தேவை சற்று குறைந்துள்ளது.
ஆனால், உலக அளவில் பொருளாதாரத்தில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும்கூட, இந்தியாவில் அலுவலக இடங்களுக்கான சந்தை பெரிய வீழ்ச்சியில்லாமல் சிறப்பாகவே செயல்பட்டு வருவதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.