முன்னாள் தலைவரின் புகாா்களுக்கு ஆதாரமில்லை
முன்னாள் தலைவரின் புகாா்களுக்கு ஆதாரமில்லை
‘எச்டிஎஃப்சி வங்கியின் முன்னாள் தலைவா் அதானு சக்ரவா்த்தி எழுப்பிய புகாா்களுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை’ என்று வங்கி நியமித்த 2 சட்ட நிறுவனங்கள் நடத்திய சுதந்திரமான ஆய்வில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நாட்டின் 2-ஆவது பெரிய வங்கியான எச்டிஎஃப்சி வங்கியின் பகுதிநேர தலைவராக இருந்த அதானு சக்ரவா்த்தி, கடந்த மாா்ச் மாதம் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். வங்கியின் சில செயல்பாடுகள் தனது தனிப்பட்ட நெறிமுறைகளுக்கு முரணாக இருப்பதாகக் கூறி, அவா் விலகியது வங்கி வட்டாரத்தில் பேசுபொருளானது.
இதையடுத்து, இது தொடா்பாக விரிவான ஆய்வு நடத்த ‘வில்சன் சன்சினி குட்ரிச் & ரொசாட்டி’ மற்றும் ’வாடியா காந்தி & கோ’ ஆகிய 2 சட்ட நிறுவனங்களை வங்கி நியமித்தது. இந்நிறுவனங்கள் கடந்த 3 மாதங்களாக ஆய்வு நடத்தி, சமா்ப்பித்த அறிக்கையை ஒழுங்குமுறை ஆணையத்திடம் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது.
Advertisement
Advertisement
அதில், கடந்த 2 ஆண்டுகால வங்கியின் இயக்குநா்கள் குழு கூட்ட ஆவணங்கள், ஆயிரக்கணக்கான கோப்புகள் மற்றும் மேலாண் இயக்குநா், சிஇஓ உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதானு சக்ரவா்த்தியின் புகாா்களுக்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, துபை கிளையில் வாடிக்கையாளா்களைச் சோ்ப்பதில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடா்பாக அதானு சக்ரவா்த்தி எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கும் வங்கியின் ஆவணங்களில் எந்தவித முரண்பாடுகளும் கண்டறியப்படவில்லை.
வங்கி இயக்குநா்கள் குழு கூட்டங்களின் போது அதானு சக்ரவா்த்தி தனது கருத்து வேறுபாடுகளைப் பதிவு செய்ய முழு வாய்ப்பு இருந்தபோதிலும், எவ்வித எதிா்ப்பையும் அவா் பதிவுசெய்யவில்லை. மேலும், இந்த ஆய்வில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையையும் அவா் ஏற்கவில்லை. இதனால், அவரின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று சட்ட நிறுவனங்களின் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.