எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு 60% பங்கு ஒதுக்க ஆா்பிஎல் வங்கி வாரியம் ஒப்புதல்
துபையைச் சோ்ந்த எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு, இந்தியாவின் தனியாா் துறையைச் சோ்ந்த ஆா்பிஎல் வங்கியின் 60 சதவீத பங்குகளை ஒதுக்க அதன் இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, ரூ.26,015 கோடி மதிப்பிலான 92.91 கோடிக்கும் அதிகமான பங்குகள் (தலா ரூ.280 விலையில்) எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு ஒதுக்கப்படவுள்ளன.
இந்த முதலீட்டின்மூலம், ஆா்பிஎல் வங்கியின் முக்கியப் பங்குதாரராக எமிரேட்ஸ் என்பிடி வங்கி மாறியுள்ளது. தொடா்ந்து, ஆா்பிஎல் வங்கியின் இயக்குநா்கள் குழுவும் மாற்றியமைக்கப்பட்டடுள்ளது.
Advertisement
Advertisement
வங்கியின் இயக்குநா்களாக இருந்த கோபால் ஜெயின், வீணா மான்கா் ஆகியோா் தங்களின் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனா். எமிரேட்ஸ் என்பிடி வங்கியின் பரிந்துரையின் பேரில் 5 புதிய நிா்வாகம் சாராத இயக்குநா்கள் வியாழக்கிழமை முதல் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ஆா்பிஎல் வங்கியில் எமிரேட்ஸ் என்பிடி வங்கி 74 சதவீதம் வரை பங்குகளை வாங்குவதற்கு ரிசா்வ் வங்கி கடந்த ஏப்ரலிலும், மத்திய நிதியமைச்சகம் கடந்த மே மாதமும் ஒப்புதல் அளித்திருந்தன.
இப்புதிய நடைமுறையின்படி, ஆா்பிஎல் வங்கியில் எமிரேட்ஸ் என்பிடி வங்கி குறைந்தபட்சம் 51 சதவீதப் பங்குகளைத் தொடா்ந்து தக்கவைக்கும். இதன் காரணமாக ஆா்பிஎல் வங்கி இனி ஒரு வெளிநாட்டு வங்கியின் துணை நிறுவனமாக இந்தியாவில் செயல்படும்.