டிரம்ப் அறிவிப்பு போர் நிறுத்த எதிரொலி.. காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலியாக சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்ந்துள்ளதைப் பற்றி...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின், மத்திய கிழக்குப் போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலியாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை செவ்வாய்க்கிழமை காலை உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடைகள் குறித்த அச்சத்திற்கிடையில், நேற்று உள்நாட்டு சந்தைகள் கடுமையான சரிவைக் கண்டன.
கச்சா எண்ணெய் மீதான அதிகளவிலான தேவைகள் காரணமாகவும் கடந்த சில நாள்களாகவே பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன.
கடந்த 25 நாள்களாக நடைபெற்று வரும், மேற்காசிய போரை 5 நாள்கள் நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேற்று அறிவிப்பு வெளியிட்டார். மேலும், நிரந்தரமாக போரை நிறுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சர்வதேச ரீதியிலான அறிவிப்பு இந்திய பங்குச்சந்தையில் இன்று (மார்ச் 24) காலை கடுமையாக எதிரொலித்தது.
அதன்படி, காலை வர்த்தகம் தொடங்கியதும் 9.15 மணியளவில் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 371.50 புள்ளிகள் உயர்ந்து 22,882.10 ஆகவும், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,398.01 புள்ளிகள் உயர்ந்து 74,094.40 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டி50-ல் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீ, ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ், ஹிந்துஸ்தான் யுனிலிவர், எல் அண்ட் டி, சன் பார்மா, மாருதி சுசூகி, அதானி போர்ட்ஸ், ஜேஎஸ்டபிள்யூ, ஏசியன் பெயிண்ட்ஸ், இண்டிகோ, டைட்டன், இடர்னல்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் கணிசமான லாபத்தை ஈட்டின.
அதேநேரத்தில், கோல் இந்தியா, டிசிஎஸ், பார்தி ஏர்டெல், பவர் கிரிட், எஸ்பிஐ காப்பீடு உள்ளிட்ட பங்குகள் சரிவைச் சந்தித்தன.
டிரம்ப்பின் அறிவிப்பு கச்சா எண்ணெய்களிலும் எதிரொலித்தது. அதன்படி, ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 112 டாலர்களில் இருந்து 100 டாலராக சரிந்தது.