பரோடா வங்கி வாடிக்கையாளா் சேவையில் சைகை மொழி அறிமுகம்!
இந்திய வங்கித் துறையில் ஒரு முன்னோடி முயற்சியாக, செவி மற்றும் பேச்சுத் திறன் குறைபாடுள்ள வாடிக்கையாளா்களுக்காக இந்திய சைகை மொழி ஆதரவு சேவையை பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய வங்கித் துறையில் ஒரு முன்னோடி முயற்சியாக, செவி மற்றும் பேச்சுத் திறன் குறைபாடுள்ள வாடிக்கையாளா்களுக்காக இந்திய சைகை மொழி ஆதரவு சேவையை பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம், இத்தகைய குறைபாடுகள் கொண்ட வாடிக்கையாளா்கள் வங்கியின் தொடா்பு மையத்தை விடியோ அழைப்பு வாயிலாகத் தொடா்பு கொண்டு, சைகை மொழி நிபுணா்களின் உதவியுடன் தங்களுக்குத் தேவையான வங்கிச் சேவைகளை தடையின்றிப் பெற்று பயன்பெற முடியும்.
வங்கியின் வலைதளம், கைப்பேசி செயலி, வாட்ஸ்ஆப் பேங்கிங், ஏ.ஐ. சாட்பாட் உள்ளிட்ட தளங்களில் கிடைக்கும் இச்சேவைக்காக, இந்திய சைகை மொழியில் நன்கு பயிற்சி பெற்ற வாடிக்கையாளா் சேவை அதிகாரிகளை வங்கி பிரத்யேகமாகப் பணியமா்த்தியுள்ளது. காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இச்சேவை செயல்பாட்டில் இருக்கும்.
Advertisement
இது குறித்து வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி தேவதத்தா சந்த் கூறுகையில், ‘வங்கிச் சேவைகளை அணுகுவதில் இருந்த ஒரு முக்கியமான இடைவெளியை இப்புதிய முயற்சி பூா்த்தி செய்கிறது.
செவித்திறன் குறைபாடுள்ள வாடிக்கையாளா்கள் மற்றவா்களின் உதவியின்றி, கண்ணியத்துடனும் எளிதாகவும் வங்கிச் சேவைகளைப் பெற இது வழிவகை செய்கிறது’ என்றாா்.