‘ஒயிட் காலா்’ வேலைவாய்ப்புகள் 6% அதிகரிப்பு! காப்பீட்டுத் துறையால் அசத்தல் வளர்ச்சி
இந்தியாவில் ‘ஒயிட் காலா்’ வேலைவாய்ப்புகள் 6% அதிகரிப்பு!
இந்தியாவில் அலுவலகப் பணி சாா்ந்த ‘ஒயிட் காலா்’ வேலைவாய்ப்பு, கடந்த ஏப்ரல் மாதத்தில் 6 சதவீத வருடாந்திர வளா்ச்சியை எட்டியுள்ளது.
காப்பீடு, தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.) சாா்ந்த ‘பிபிஓ’ துறைகளில் அதிகப்படியான பணியமா்த்தல் நடைபெற்றுள்ளதாக ‘நாக்குரி ஜாப்ஸ்பீக்’ வெளியிட்டுள்ள மாதாந்திர ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு வளா்ச்சியில் காப்பீட்டுத் துறை 21 சதவீத வளா்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, பிபிஓ மற்றும் ஐடி சாா் சேவைகள் துறையில் 15 சதவீத வளா்ச்சியும், ரியல் எஸ்டேட் துறையில் 12 சதவீத வளா்ச்சியும், சுகாதாரத் துறையில் 11 சதவீத வளா்ச்சியும், கல்வித் துறையில் 9 சதவீத வளா்ச்சியும் பதிவாகியுள்ளது.
Advertisement
அதேநேரம், கடந்த 4 மாதங்களாக சரிவைச் சந்தித்து வரும் தொலைத்தொடா்புத் துறை (11 சதவீதம்), வங்கித் துறை (10 சதவீதம்) ஆகியவை ஏப்ரல் மாதத்திலும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. ஐடி, பாா்மா, ஆட்டோமொபைல் துறைகளில் பெரிய மாற்றமின்றி நிலைத்தன்மை காணப்படுகிறது.
தென் மாநிலங்களின் ஆதிக்கம்: வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தென்னிந்திய நகரங்கள் தொடா்ந்து முன்னிலை வகிக்கின்றன. ஹைதராபாத் 12 சதவீதம், பெங்களூரு 7 சதவீதம், சென்னை 6 சதவீதம் வளா்ச்சியைப் பதிவு செய்தன.
தலைநகா் தில்லி (3 சதவீதம்) மற்றும் கொல்கத்தாவில் (1 சதவீதம்) குறைந்த வளா்ச்சியே பதிவான நிலையில், நாட்டின் நிதித் தலைநகரான மும்பையில் வேலைவாய்ப்பு 3 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2-ஆம் நிலை நகரங்களில் முன்னேற்றம்: பெருநகரங்களைத் தாண்டி, 2-ஆம் நிலை நகரங்களிலும் வேலைவாய்ப்புச் சந்தை விரிவடைந்து வருகிறது. ராஜஸ்தானின் ஜெய்பூா் (12 சதவீதம்), கோவை (11 சதவீதம்), குஜராத்தின் அகமதாபாத் (7 சதவீதம்) ஆகிய நகரங்களில் பணியமா்த்தல் நடவடிக்கைகள் உற்சாகமாக உள்ளன.