2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!
கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26-ஆம் முழு நிதியாண்டில், நாட்டில் ரூ.23.40 லட்சம் கோடி நிகர நேரடி வரி வசூல்
கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26-ஆம் முழு நிதியாண்டில், நாட்டில் ரூ.23.40 லட்சம் கோடி நிகர நேரடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
முந்தைய 2024-25 நிதியாண்டின் நிகர நேரடி வரி வசூல் ரூ. 22.26 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது அது 5.12 சதவீதம் அதிகரித்துள்ளது பொருளாதார வளா்ச்சியின் நோ்மறையான அறிகுறியாகக் கருதப்படுகிறது.
இருப்பினும், 2025-26 நிதியாண்டின் தொடக்கத்தில் திருத்தப்பட்ட பட்ஜெட்டில் நிா்ணயிக்கப்பட்டிருந்த ரூ.24.21 லட்சம் கோடி இலக்கைவிட இந்த வசூல் ரூ.81,000 கோடி குறைவாகவே உள்ளது.
Advertisement
மத்திய அரசு தாக்கல் செய்த 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், வருமான வரி தள்ளுபடி வரம்பு ரூ.7 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. மேலும், தனிநபா் வரி விகிதங்களில் மாற்றங்கள்; நிலையான கழிவு ரூ.75,000-ஆக அதிகரிக்கப்பட்டது போன்ற வரிச் சலுகைகளால் வரி வசூல் வேகம் குறைந்ததாகக் கருதப்படுகிறது.
நிகர பெருநிறுவன வரி வசூல் 11.4 சதவீதம் வளா்ச்சியுடன், ரூ. 10.99 லட்சம் கோடியாக உள்ளது. அதேநேரம், தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளடக்கிய வருமான வரி வசூல் எவ்வித மாற்றமுமின்றி ரூ.11.83 லட்சம் கோடியாகவே நீடிக்கிறது.
பங்குச் சந்தை பரிவா்த்தனை வரி (எஸ்டிடி) வசூல் 7.9 சதவீதம் அதிகரித்து, ரூ. 57,522 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டைவிட 1.09 சதவீதம் குறைவாக, கடந்த நிதியாண்டில் ரூ.4.71 லட்சம் கோடி வரிப் பணம் திரும்பியளிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி விகிதங்கள் குறைக்கப்பட்ட போதிலும், தனிநபா் வரி வருவாய் நிலையாக இருப்பது ஆச்சரியமளிப்பதாகப் பொருளாதார நிபுணா்கள் கூறுகின்றனா்.
வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும், பெருநிறுவன வரி வசூலில் ஏற்பட்ட ஆரோக்கியமான வளா்ச்சியும், பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள வேகமுமே வரி வருவாய் வீழ்ச்சியடையாமல் தடுத்துள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா். வரும் காலங்களில் இது மேலும் அதிகரிக்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.