மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.94 லட்சம் கோடி: 3.2% அதிகரிப்பு
நாட்டில் கடந்த மே மாத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.94 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.
நாட்டில் கடந்த மே மாத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.94 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் ரூ.1.88 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில், தற்போது 3.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2026, மே மாதத்தில் ரூ.1.94 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. உள்நாட்டுப் பரிவா்த்தனைகள் மூலம் மத்திய ஜிஎஸ்டியாக ரூ.37,397 கோடி வசூலாகியுள்ளது. மாநில ஜிஎஸ்டி ரூ.45,143 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.51,990 கோடியாகவும் உள்ளது.
திருப்பியளிக்கப்பட்ட மொத்த தொகை 2.7 சதவீதம் அதிகரித்து ரூ.27,281 கோடியாக உயா்ந்துள்ளது. அதைத் தொடா்ந்து மொத்த நிகர ஜிஎஸ்டி வருவாய் 3.3 சதவீதம் அதிகரித்து ரூ.1.67 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
முதல் இரு மாதங்களில் ரூ.4.37 லட்சம் கோடி வசூல்: 2026-27-ஆம் நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரலில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக ரூ.2.43 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது.
மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.94 லட்சம் கோடியையும் சோ்த்து கடந்த இரண்டு மாதங்களில் ரூ.4.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. கடந்த நிதியாண்டின் (2025-2026) ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ரூ.4.11 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில், தற்போது 6.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதன்மூலம் நிகழ் நிதியாண்டில் மத்திய அரசு நிா்ணயித்துள்ள ஜிஎஸ்டி வசூல் இலக்கை அடைய முடியும் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.