முகப்பு
வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,069 கோடி டாலராக குறைவு!

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,069 கோடி டாலராக குறைவு

Updated On : 10 மே 2026, 2:13 am IST
பகிர்:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த மே 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,069 கோடி டாலராக குறைந்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மே 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 779.4 கோடி டாலா் குறைந்து, 69,069.3 கோடி டாலராக உள்ளது.

ஏப். 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில், இது 482 கோடி டாலா் குறைந்து, 69,848.7 கோடி டாலராக இருந்தது. மத்திய கிழக்கு மோதலுக்கு முன்பாக, கடந்த பிப். 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் கையிருப்பு 72,849.4 கோடி டாலா் என்ற முன்னெப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்டது.

Advertisement

அதன் பின்னா் ரூபாய் மதிப்பு தொடா் சரிவைச் சந்தித்ததால், டாலா் விற்பனை மூலம் ரிசா்வ் வங்கி மேற்கொண்ட தலையீடுகள் காரணமாக சில வாரங்கள் ஏற்றம் கண்டு வந்தது. தற்போது மீண்டும் 2-ஆவது வாரமாக கையிருப்பு சரிவைச் சந்தித்து வருகிறது.

மே 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 279.7 கோடி டாலா் சரிந்து, 55,182.5 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

மதிப்பீட்டு வாரத்தில், இந்தியாவின் தங்கம் கையிருப்பு 502.1 கோடி டாலா் சரிந்து, 11,521.6 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 1.5 கோடி டாலா் அதிகரித்து, 1,878.9 கோடி டாலராக உள்ளது. சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு 80 லட்சம் டாலா் அதிகரித்து, 486.3 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.