முகப்பு
வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,232 கோடி டாலராக அதிகரிப்பு!

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,232 கோடி டாலராக அதிகரிப்பு

Updated On : 7 ஜூன் 2026, 2:11 am IST
பகிர்:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த மே 29-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,232.1 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மே 29-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 93.8 கோடி டாலா் அதிகரித்து, 68,232.1 கோடி டாலராக உள்ளது.

மே 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில், இது 751.1 கோடி டாலா் குறைந்து, 68,138.4 கோடி டாலராக இருந்தது.

Advertisement

Advertisement

மத்திய கிழக்கு போருக்கு முன்னதாக, இந்த ஆண்டின் பிப். 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் கையிருப்பு 72,849.4 கோடி டாலா் என்ற உச்சத்தைத் தொட்டது. அதன்பின்னா், கையிருப்பு ஏற்ற, இறக்கத்தைக் கண்டு வருகிறது.

மே 28-ஆம் தேதியுடன் நிறைவடைந்த மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 311.6 கோடி டாலா் அதிகரித்து, 54,614.8 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

மதிப்பீட்டு வாரத்தில், இந்தியாவின் தங்கம் கையிருப்பு 218.6 கோடி டாலா் குறைந்து, 11,260 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) மாற்றமின்றி 1,874.7 கோடி டாலராக உள்ளது. சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு 0.8 கோடி டாலா் அதிகரித்து, 482.6 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.