முகப்பு
விருதுநகர்

குரூப்-4 தேர்வுக்கான அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டம்

அரசு தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வுக்கான அனைத்து துறை அதிகாரிகளுடனான கல்நதாய்வு கூட்டம் புதன்கிழமை

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 11:55 am IST
பகிர்:

அரசு தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வுக்கான அனைத்து துறை அதிகாரிகளுடனான கல்நதாய்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

     விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்ற இக்கூட்டத்திற்கு ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தலைமை வகித்துப் பேசியதாவது: இந்த மாவட்டத்தில் குரூப்-4 தேர்வில் மொத்தம் 54,223 பேர் பங்கேற்க உள்ளனர். இத்தேர்வு விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களில் 119 தேர்வு மையங்களில் வருகிற 25-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகள் அனைத்தும் மும்முரமாக நடந்து வருகின்றன. மேலும், மர்ம நபர்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் காவல் துறை பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது.

    இத்தேர்வுக்காக வந்துள்ள வினாத்தாள்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் விருதுநகர், ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் திருச்சுழி ஆகிய சார்நிலைக் கருவூலங்களில் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களில் 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையில் ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்பு அளிக்க உள்ளனர். அதோடு, தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்படும்.

Advertisement

Advertisement

    தேர்வு நாளன்று தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் மற்றும் ஆவணங்களை எடுத்துச் செல்வதற்காக 33 வாகனங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்கு செல்கிறார்கள். அதோடு, தேர்வுக்கூட அறைகளில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளும் வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. இம்மாவட்டத்தில் பதற்றமான தேர்வு மையங்களாக கண்டறியப்பட்டுள்ளவைகளுக்கு கூடுதலாக கேமரா பொருத்தி தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

     மேலும், தேர்வு மையங்களின் கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படை அலுவலர்களை நியமனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களுக்கும் எளிதாக சென்று வரும் வகையில் போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.

     இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். மகேஸ்வரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அருமைநாயகம் வரகுணராஜ் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments