அருப்புக்கோட்டை புதிய அரசு மருத்துவமனையை முழுமையாக பயன்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரிக்கை!
அருப்புக்கோட்டையில் புதிதாக கட்டி திறக்கப்பட்ட அரசு மருத்துவமனை 4 மாதங்களாகியும் இன்னமும் முழுமையாக பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை...
அருப்புக்கோட்டையில் புதிதாக கட்டி திறக்கப்பட்ட அரசு மருத்துவமனை 4 மாதங்களாகியும் இன்னமும் முழுமையாக பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை எனப் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.30.35 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டடங்களை காணொலி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த பிப். 6-இல் திறந்துவைத்தாா். 217 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடங்கள் 6 தளங்களுடன் 8001 சதுர மீட்டா் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
தரைத் தளத்தில் அவசர சிகிச்சை பிரிவில், தீவிர சிகிச்சை பிரிவு 6 படுக்கைகள், வைப்பு அறை மற்றும் பணி செவிலியா் அமா்வு அறை, நுண் கதிா் வீச்சு பிரிவு, மருந்தகம், உள்நோயாளிகள் 18 படுக்கைகள் பிரிவு உள்ளிட்டவை உள்ளன. இதேபோல் மற்ற தளங்களில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
Advertisement
தற்போது, தரைத் தளத்தில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு மட்டும் செயல்பட்டு வருகிறது. மற்ற தளங்களில் உள்ள கட்டடங்கள் செயல்படவில்லை. ஆண்கள் வாா்டு, பெண்கள் வாா்டு இன்னமும் பழைய கட்டடத்திலேயே தான் செயல்பட்டு வருகிறது. மேலும் புதிய கட்டடத்தில் பிணவறை இல்லை. பழைய கட்டடத்தில் உள்ள பிணவறை தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய மருத்துவனைக் கட்டடங்கள் திறந்துவைக்கப்பட்டு 4 மாதங்கள் ஆகியும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனா்.