நோயின்றி வாழ...
மனித வாழ்க்கையில் தூய்மையான உணவின் முக்கியத்துவத்தை உணர்ந்து முயன்ற தேடலின் விளைவாக உருவானதே நுண்கீரைகள் வளர்ப்பு.
'மனித வாழ்க்கையில் தூய்மையான உணவின் முக்கியத்துவத்தை உணர்ந்து முயன்ற தேடலின் விளைவாக உருவானதே நுண்கீரைகள் வளர்ப்பு. அன்றாட உணவில் இந்த நுண்கீரைகளைச் சேர்த்தால், நோயின்றி வாழலாம்' என்கிறார் இயற்கை விவசாயி ஏ.காயத்ரி.
கடலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட சிதம்பரம் அருகேயுள்ள உசுப்பூர் கிராமத்தைச் சேர்ந்த முப்பத்தெட்டு வயதான காயத்ரியிடம் பேசியபோது:
'பி.எஸ்ஸி., பி.எட். படித்துள்ளேன். தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளேன். எனது கணவர் ராஜ்பிரபு, மும்பையில் உள்ள முன்னணி தனியார் நிறுவனத்தில் உயர்பதவியில் உள்ளார். ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
Advertisement
Advertisement
கணவர் துணையுடன் எனது அம்மாவின் கனவை நிறைவேற்றும் வகையில், இயற்கையான முறையில் இல்லத்திலேயே சிறிய குடிலை அமைத்து, பிரத்யேகமான தட்டுகளில் நுண்கீரைகளை வளர்த்தேன். இவை முழுமையாக வளர்ந்த கீரைகளுக்கும், முளைகட்டிய பயிர்களுக்கும் இடைப்பட்ட பருவத்தில் (7 முதல் 14 நாள்களில்) அறுவடை செய்யப்படும் இளம் தாவரங்களாகும். இலைகள், தண்டுகளுடன் சேர்த்து உண்ணப்படும் இந்த நுண் கீரைகள், முழுமையாக வளர்ந்த கீரைகளைவிட 40 மடங்கு அதிகமான ஊட்டச்சத்துகளையும், வைட்டமின்களையும் கொண்டுள்ளன.
புரதம், வைட்டமின் இ சத்துகள் நிறைந்த சூரியகாந்தி, உடல் எடையைக் குறைக்கவும் கொழுப்பைக் கட்டுக்குள் வைக்கவும் உதவும் கொள்ளு, குழந்தைகளின் செரிமானத்தை மேம்படுத்தி, உடலுக்குக் குளிர்ச்சி தரும் பச்சைப்பயறு, நஞ்சு நீக்கும் ஆற்றல் கொண்ட புரோக்கோலி, கல்லீரலைப் பாதுகாக்கும் முள்ளங்கி, ஹீமோகுளோபின் அளவை உயர்த்தும் கோதுமைப் புல், தசை வளர்ச்சிக்கு உதவும் கொண்டக்கடலை உள்ளிட்டவையும் எனது பண்ணையில் பசுமை மாறாமல் வளர்க்கப்படுகின்றன.
கண் ஆரோக்கியம் தரும் பட்டாணி, ரத்தச் சோகையை நீக்கும் சிறு கீரை, பாலூட்டும் தாய்மார்களுக்கு உகந்த வெந்தயம், சளியைக் குறைக்கும் கடுகு, கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் சிவப்பு அமராந்தஸ், வாயுத் தொல்லையை நீக்கும் ஓமம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவக் குணங்கள் கொண்ட கீரைகளும் ஏழு முதல் பத்து நாள்களுக்குள் அறுவடைக்குத் தயாராகி விடுகின்றன. தினசரி உணவில் கீரைகளை மிகக் குறைந்த அளவு எடுத்தாலே, ஒட்டுமொத்த உடலுக்கும் பெரும் ஆரோக்கியத்தை அளிக்கும்.
இந்த நுண்கீரைகளை நேர்த்தியான சிறிய டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்கிறேன். சென்னை, புதுச்சேரி, கோயம்புத்தூர், ஈரோடு, காரைக்கால், சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விரைவாக அனுப்பி வருகிறேன்.
திட்டமிட்ட வணிகத்தால் மாதம்தோறும் 30 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கிறது. எனது தந்தையும், மாமனாரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது ஏற்பட்ட தேடலின் விளைவே நுண்கீரைகள் வளர்ப்பாகும்' என்கிறார் காயத்ரி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.