சொர்க்கத்துக்கான சாலை
உலகின் அற்புதமான சாலை', 'சொர்க்கத்துக்கான சாலை' என்றெல்லாம் புகழப்படும் சாலை இந்தியாவில்தான் இருக்கிறது.
'உலகின் அற்புதமான சாலை', 'சொர்க்கத்துக்கான சாலை' என்றெல்லாம் புகழப்படும் சாலை இந்தியாவில்தான் இருக்கிறது. குஜராத்தின் கட்ச் பகுதியில் அமைந்திருக்கும் சுமார் 30 கி.மீ. நீளமுள்ள இந்தச் சாலையானது கடுலி முதல் சந்தல்பூர் வரையிலான 278 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஒரு பாகமாக அமைந்துள்ளது.
சொர்க்கத்துக்கான சாலைப் பயணத்தை அசாதாரணமானதாக மாற்றுவது அதன் சேருமிடம் மட்டுமல்ல, அது கடந்து செல்லும் நிலப்பரப்பும்தான். தோர்டோவில் உள்ள 'டென்ட் சிட்டி'யிலிருந்து, ஹரப்பா நாகரிகத்தின் மையமும் யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தளமுமான தோலாவிராவை இணைக்கிறது. இந்தச் சாலையின் இருபுறமும் இருப்பது உறைந்த ஏரியோ அல்லது பனிக்கட்டி நிலப்பரப்போ அல்ல. ரான் பகுதியின் உப்பளங்கள்தான். ஃபிளமிங்கோக்கள், ப்ளோவர்கள், கொக்குகள், கடற்பறவைகள், வாத்துகள் போன்றவையும் இதன் அழகைக் கூட்டுகின்றன.
மேற்கு குஜராத்தின் எல்லையில் அமைந்துள்ள, மாயாஜால வெண்ணிற நிலப்பரப்பை உருவாக்கும் 'கிரேட் ரான் ஆஃப் கட்ச்', இந்தியாவின் மிகப் பெரிய உப்புச் சமவெளியாகும். இதுவும், சொர்க்கத்தின் சாலையும் உலகளாவிய சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. பாகிஸ்தான் எல்லை இங்கிருந்து 50 கி.மீ. தூரத்தில்தான் உள்ளது.
Advertisement
Advertisement
ஒருபுறம் அரபிக்கடலும் மறுபுறம் தார் பாலைவனமும் சூழ அமைந்துள்ள விசித்திரமான, அழகான இந்த இடம் கிரேட் ரான், லிட்டில் ரான் என இரண்டு தனித்தனிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
கட்ச் ஏரியை கிழித்துக் கொண்டு செல்லும் இந்தச் சாலை, பிரமிக்க வைக்கும் காட்சிகளை வழங்குகிறது. அக்டோபர் முதல் பிப்ரவரி வரை பயணிகளை ஈர்க்கும் திருவிழாவான 'ரான் உத்சவ்' காலங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். பயண ஆர்வலர்கள் இந்தச் சாலையை டிரோன்கள் மூலம் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றுகின்றனர்.
சொர்க்கத்துக்கான சாலையில் பயணிக்கும்போது, ரான் பகுதியின் செழுமையான பாரம்பரியம், கலாசாரம், தோலாவிராவின் வரலாறு ஆகியவற்றை அறிந்துகொள்ள முடிகிறது.
அருகில் உள்ள விமான நிலையம், ரயில் நிலையம் புஜ். அங்கிருந்து சொர்க்கத்தின் சாலைப் பகுதியில் பயணிக்க வாடகை வாகனத்தை அமர்த்திக்கொள்ளலாம். சொர்க்கத்தின் சாலை புஜ் நகரிலிருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.