முகப்பு
தினமணி கதிர்

உயிர் காக்கும் கருவி உருவான கதை

இதயத்துடிப்பு குறைவாக இருப்பவர்களுக்குப் பொருத்தக்கூடிய ஒரு சிறிய கருவி பேஸ் மேக்கர் ஆகும். தமிழில் இதை 'இதய முடுக்கி' என்கிறார்கள்.

பகிர்:

முனைவர் பா.சக்திவேல்

இதயத்துடிப்பு குறைவாக இருப்பவர்களுக்குப் பொருத்தக்கூடிய ஒரு சிறிய கருவி பேஸ் மேக்கர் ஆகும். தமிழில் இதை 'இதய முடுக்கி' என்கிறார்கள்.

சுமார் 5 செ. மீ. நீள, அகலமும், 1 செ. மீ. கனமும் கொண்ட இதன் எடை 25-இலிருந்து 30 கிராம் என்கிற அளவில் இருக்கும். நவீனக் கருவி 5 கிராம் எடைக்கும் குறைவாக, மிகச் சிறிய உருவத்தில் கிடைக்க ஆரம்பித்துவிட்டது.

Advertisement

ஒரு மனிதனின் இதயத் துடிப்பு 60-இல் இருந்து 100 என்ற அளவில் இருக்கும். இதுவே ஓடும் போதோ உடற்பயிற்சி செய்யும் போதோ கூடுதலாக இருக்கும். இதேபோல் 32-இல் இருந்து 30 வரையிலான இதயத்துடிப்பு இருப்பவர்களுக்கு இதய முடுக்கி மிகவும் அவசியம்.

ஒரு மெல்லிய குழாய் வழியாக இதய முடுக்கியின் மின் இணைப்புக் கம்பியை இதயத்தின் மேல் அறைகளின் தடுப்புச் சுவரைத் தொடும்படியாகவோ அல்லது வலதுபுறக் கீழறையைத் தொடும் பகுதியிலோ வைக்கிறார்கள். இன்னொரு கம்பியை வெளிப்புறத்தில் உள்ள மின்கலத்துடன் (பேட்டரியுடன் ) இணைக்கின்றனர்.

நோயாளி ஆண் என்றால் அவரது கழுத்து எலும்புக்குக் கீழ் தோலுக்கடியிலும், பெண்ணாக இருந்தால் மேல் வயிற்றுத் தோலுக்கு அடியிலும் கருவியைப் பொருத்துகின்றனர்.

இதய முடுக்கியில் உள்ள மின்கலத்தின் ஆயுள் சாதாரணமாக 10 ஆண்டுகள் வரை நீடிக்கும். தொடு கம்பியில்லா இதய முடுக்கிகள் தற்சமயம் நவீனமாகி வருகின்றன. இப்படிப்பட்ட உயிர்காக்கும் கருவியின் கண்டுபிடிப்பு ஒரு எதேட்சையான தவறால் வந்த சுவாரசியம் வரலாற்றில் உண்டு.

1956 -ஆம் ஆண்டு, அமெரிக்க மின் பொறியியலாளர் வில்சன் கிரேட்பேச், இதயத்துடிப்பைப் பதிவு செய்யும் கருவியை வடிவமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதற்கான மின்னணுச் சுற்றை உருவாக்கும்போது, ஒரு ட்ரான்சிஸ்டரைப் பயன்படுத்தி ஆசிலேட்டர் ஒன்றைக் கட்டமைப்பதற்காக அதில் 10 கிலோ ஓம் மின்தடையைப் (ரெசிஸ்டர்) பயன்படுத்த எண்ணினார்.

அப்போது தவறுதலாக மின்தடை மேல் உள்ள நிறக்கோடுகளைக் கண்டு 10 கிலோ ஓம் மின்தடைக்குப் பதிலாக 1 மெகா ஓம் மின்தடையை எடுத்து இணைத்துவிட்டார். அதனால் அக்கருவியானது மின் துடிப்பை வெளியிட்டது.

இக்கருவியை இதயத்தோடு இணைத்தபொழுது இதயத்துடிப்பைப் பதிவு செய்வதற்குப் பதிலாக மின்துடிப்பை உருவாக்கி, இதயத்தின் மீது செலுத்தியது. இதன் மூலம் பலவீனமான சுணக்கமான இதயத்துடிப்பு கொண்டவர்களுக்கு இக்கருவி மூலம் உயிர்வாழ்வதற்குத் தேவையான இதயத்துடிப்பை வழங்கமுடியும் என்று கண்டறிந்தார் .

இதய முடுக்கிகளின் வகைகள்

தேவைப்படும் இதய முடுக்கி வகை, நோயாளியின் அறிகுறிகளையும் அவர்களுக்கு இருக்கும் குறிப்பிட்ட இதய நிலையையும் பொறுத்தது. நோயறிதல் மதிப்பீட்டுக்குப் பிறகு, தேவைகளுக்கு ஏற்ற சரியான இதய முடுக்கியைத் தேர்ந்தெடுப்பதற்கான பரிந்துரைகளை இதய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஒற்றை-அறை இதய முடுக்கி

இந்த வகை இதய முடுக்கியில், துடிப்பு ஜெனரேட்டரை இதயத்தின் ஒரு அறையுடன் இணைக்கும் ஒரு கம்பி உள்ளது. பெரும்பாலான மக்களுக்கு, இதயத் துடிப்பு வேகத்தைக் கட்டுப்படுத்த, கம்பியை வலது வென்ட்ரிக்கிளுடன் (கீழ் இதய அறை) இணைக்க ஒற்றை-அறை இதய முடுக்கியைப் பயன்படுத்துகிறார்கள்.

அறிகுறிகளையும் தேவைப்படும் வேகத்தின் வகையையும் பொறுத்து, அந்த அறையில் வேகத்தைத் தூண்டுவதற்காக, கம்பியை இதயத்தின் வலது பக்கம் மேல் இதய அறையுடன் இணைக்கிறார்கள்.

இரட்டை-அறை இதய முடுக்கி

இரண்டு கம்பிகளுடன், இந்தச் சாதனம் இதயத்தின் வலது பக்கத்தில் உள்ள இரண்டு அறைகளான வலது ஏட்ரியம் மற்றும் வலது வென்ட்ரிக்கிகளுடன் இணைகிறது. இரண்டு அறைகளின் சுருக்கங்களின் வேகத்தை ஒழுங்குபடுத்துவதற்காக மருத்துவர் இரட்டை-அறை பேஸ்மேக்கரை நிரல்படுத்துகிறார்.

இந்த இதய முடுக்கி, இதயத்தின் இரண்டு அறைகளும் சரியான தாளத்தில் சுருங்கி விரிய உதவுகிறது. இந்தச் சுருக்கங்கள், வலது ஏட்ரியத்திலிருந்து வலது வென்ட்ரிக்கிளுக்கு ரத்தம் சரியாகப் பாய்வதற்கு வழிவகுக்கின்றன. இதயத்தின் துடிப்பு ஒத்திசைவுத் தேவைகளைப் பொறுத்து, இரட்டை-அறை சாதனம் பொருத்தமான தேர்வாக இருக்கலாம்.

பைவென்ட்ரிக்குலர் இதய முடுக்கி

இதய மறுஒழுங்குமுறை சிகிச்சை (கார்டியாக் ரீசிங்கரனைசேஷன் தெரபி) சாதனம் என்றும் அழைக்கப்படும் இந்த இதய முடுக்கி, வலது ஏட்ரியம் மற்றும் இரண்டு வென்ட்ரிக்கிள்களுடன் இணைக்கப்பட்ட மூன்று கம்பிகள் உள்ளன. முற்றிய இதயச் செயலிழப்பால் ஏற்படும் அரித்மியாக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பைவென்ட்ரிக்குலர் இதய முடுக்கிகளைப் பயன்படுத்துகிறார்கள்.

இதயச் செயலிழப்பு உள்ள பலருக்கு, இடது மற்றும் வலது வென்ட்ரிக்கிள்கள் ஒரே நேரத்தில் ரத்தத்தைச் செலுத்துவதில்லை. மருத்துவர்கள், வென்ட்ரிக்கிள்களின் சுருக்கங்களை ஒருங்கிணைக்கும் வகையில் பைவென்ட்ரிக்குலர் இதய முடுக்கிகளை நிரல்படுத்துகிறார்கள்.

இதன் மூலம் அவை இரண்டும் ஒன்றாக ரத்தத்தைச் செலுத்துகின்றன. வென்ட்ரிக்கிள்களின் சுருக்கங்களை ஒருங்கிணைப்பது, இதயம் ரத்தத்தை மிகவும் திறமையாகச் செலுத்த உதவுகிறது மற்றும் இதயச் செயலிழப்பு அறிகுறிகளைப் போக்கவும் உதவும். இந்த சிகிச்சையானது இதய அறைகளின் உந்திச் செயல்பாட்டை மறுசீரமைப்பதால், இதய மறுசீரமைப்பு சிகிச்சை என்று அழைக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.