விழித்தெழு!
மழைக்கு ஏங்கிக் கிடக்காதே - நீமரத்தை நட்டால்
மழைக்கு ஏங்கிக் கிடக்காதே - நீ
மரத்தை நட்டால்
அது போதும்!
மலையைக் கண்டு திகைக்காதே - சிறு
உளியை எடுத்திடு
அது போதும்!
மடமை கண்டு மலைக்காதே - உன்
கடமை செய்திடு
அது போதும்!
முள்ளைப் பகையாய் நினைக்காதே - அது
வேலி ஆனால்
அது போதும்!
கல்லைக் கண்டு கலங்காதே - அதை
சிலையாய் வடித்திடு
அது போதும்!
சொல்லைப் பேசிக் கிடக்காதே - நீ
செயலாய் மாற்றிடு
அது போதும்!
நெருப்பைக் கண்டு நெகிழாதே -அதில்
சோறு சமைத்திடு
அது போதும்!
காரிருள் கண்டு மிரளாதே - செங்
கதிராய் எழுந்திடு
அது போதும்!
எதனைக் கண்டும் ஏங்காதே - விழித்
தெழுந்து செயல்படு
அது போதும்!