இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில்...
முகமது சாதிக், அப்துல் ரகுமான் ராஜா என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் பாண்டியராஜன்.
முகமது சாதிக், அப்துல் ரகுமான் ராஜா என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் பாண்டியராஜன். படம் இயக்குவதில் ஒரு காலகட்டத்தில் தீவிரமாக இயங்கி வந்த பாண்டியராஜன், நடிப்பதில் பெரும் கவனம் செலுத்தினார். இப்போது முக்கிய இயக்குநர்கள் அழைத்தால் மட்டுமே நடிப்புக்கு வருகிறார். இந்த நிலையில் இரட்டை இயக்குநர்களின் அழைப்பை ஏற்றுள்ளார்.
இது தொடர்பாக, படத்தைத் தயாரிக்கும் லிகோ கூரியர் நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பாண்டியராஜன் பேசும் போது, 'ஜென் - ஸி என அழைக்கப்படும் இன்றைய தலைமுறையினர் படு வேகமாக எல்லாத் துறைகளிலும் முன்னேறுகிறார்கள். அதிலும் குறிப்பாக சினிமா துறையில் அவர்கள் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியுடன் இருக்கிறார்கள். அதற்காகக் கடுமையாக உழைக்கிறார்கள்.
இளம் இயக்குநர்களாக வரவுள்ள முகமது சாதிக், அப்துல் ரகுமான் ராஜா இந்த வகையறாதான். ஏ.ஜ. வந்த பிறகு சினிமாவில் பல மாற்றங்கள் வந்துள்ளன. அதையெல்லாம் நாங்கள் இணையப் போகிற படத்தில் இவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறேன்.
Advertisement
நான் யாரிடமும் வாய்ப்புக் கேட்டுச் சென்றதில்லை. வந்த வாய்ப்புகளை கட்டாயமாக ஏற்றுக்கொள்வேன். இந்த இரட்டை இயக்குநர்களின் தன்னம்பிக்கை பிடித்திருக்கிறது. சினிமாவில் வாய்ப்புக் கிடைக்காத போது, பல தொழில்களில் இறங்கி, சாதித்து விட்டு, மீண்டும் சினிமாவுக்குத் திரும்பியிருக்கிறார்கள். அவர்களுக்குக் கை கொடுப்பது என் முக்கியமான வேலை' என்றார்.
இந்த விழாவில் இசையமைப்பாளர் ரெஹனா, நடிகை அஷ்மிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.