முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பசித்தவனுக்கு ரொட்டியே கடவுள்!

உணர்ச்சியாக, சந்தோஷமாக அதே நேரத்தில் சிந்திக்கக்கூடிய படமாகவும் 'ரூம் பாய்' வந்திருக்கிறது.

Updated On : 21 மார்ச், 2026 at 10:47 PM
பகிர்:

உணர்ச்சியாக, சந்தோஷமாக அதே நேரத்தில் சிந்திக்கக்கூடிய படமாகவும் 'ரூம் பாய்' வந்திருக்கிறது. திரைக்கதை எழுதும் போது என்ன சந்தோஷம் இருந்ததோ, அதையே சினிமாவாக மாற்றும் போதும் அனுபவித்தேன். அடிமட்டத்திலிருந்து சினிமா பார்த்து முன்னேறி இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். மக்களின் அவலம் புரியும். துயரம் தெரியும். பயணங்களின் அருமை புரியும். நமது இயலாமை, இல்லாமைகளை உணர்ந்திருக்கிறேன்.

என் சினிமா உணர்வுபூர்வமாகவும், இயல்பாகவும் அமைய என் அனுபவங்களே உதவுகின்றது. தொட்டு உணர்கிற மாதிரி உணர்வுகள் என் சினிமாவில் வந்தால் அதை விட கொடுப்பினை வேறு இல்லை...' ஆர்வத்துடன் பேசுகிறார் இயக்குநர் ஜெகன் ராயன். தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி மாணவர். பல குறும்படங்கள் இயக்கிய அனுபவத்திலிருந்து கோடம்பாக்கம் வருகிறார்.

குறும்பட உலகத்தில் இருந்து வரும் மற்றொரு இயக்குநர்... எப்படி இருக்கிறது?

வேலூர் பக்கம் திருப்பத்தூர்தான் நமக்கு எல்லாம். கேமிரா, சினிமா, படப்பிடிப்புத் தளம் என எப்போதும் மனசுக்குள் ஒரு அலையடிக்கும். 'நிறைய பேச மாட்டேன். திரைப்படத்தில்தான் பேசுவேன்.

இந்த ஒரு நாளுக்காக நான் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக ஒரு கனவோடு வாழ்ந்து கொண்டிருந்தேன். அந்தக் கனவு இன்று நனவாகியுள்ளது.' இந்தப் பயணத்தை எனது தந்தை என்.வி. சுந்தரம் அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். 'என் மகன் ஒருநாள் இயக்குநராக வருவான்' என்று அவர் எப்போதும் நம்பிக்கை வைத்திருந்தார்.

பல வருடப் போராட்டத்துக்குப் பிறகு தயாரிப்பாளர் ஒருவரிடம் தனது நிலத்தை அடமானம் வைத்து படம் எடுக்க உதவி கேட்டேன். ஆனால், அவர் அதற்குப் பதிலாக தனது மகனை வைத்து படம் எடுங்கள் என்றார். இப்படித்தான் இது நடந்தது. படப்பிடிப்பு முழுவதும் தயாரிப்பாளர் முழு சுதந்திரம் அளித்தார்.

அதனால் தான் என்னால் இந்தத் திரைப்படத்தைச் சிறப்பாக உருவாக்க முடிந்தது. குறிப்பாக ஒளிப்பதிவாளர் பாரதி, கவிஞர் சூரியமூர்த்தி ஆகியோரின் ஆதரவுக்கு நன்றி. சினிமாவுக்கான ஸ்க்ரிப்டுக்கு, எதையும் கொஞ்சம் மேலே இருந்து பார்க்க வேண்டும் எனச் சொல்லுவார்கள். அந்தக் கதைக்காக வாழ்க்கையையும் மேலே இருந்து பார்த்தேன். இப்போது ஆல் இஸ் வெல்.

என்ன கதை?

எண்ணங்கள்தான் வாழ்க்கை. ஒரு விஷயத்தில் எந்தளவுக்குத் திட்டமிட்டு இருக்கிறோமோ, அது அந்தளவுக்குக் கிடைத்தே தீரும் என்பதுதான் இங்கே நீதி. ஒரு விஷயத்தை ஆழ்ந்து நோக்க வேண்டும் என்பதுதான் வாழ்க்கையின் தத்துவம். அது மனித எண்ணங்களின் ரகசியம்.

அந்த ரகசியத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். எண்ணம் எதுவோ, அதுவே வாழ்க்கை. மூடி அடைக்கப்பட்டிருக்கும் சின்ன கூடாரத்தில் இருந்து ஒரு உலகமே வெளியே வருகிறது என்பதும் இதன் உள்ளடக்கம். இது நம்பிக்கைகளோடு விளையாடும் கதை. கெட்ட விஷயங்களை விட்டொழிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டே, அதைப் பற்றிச் சிந்திப்போம்.

அது எல்லாம் சேர்ந்து அந்த எண்ணம், சம்பவங்கள் நடப்பதற்கான சூழலை அமைக்கிறது. சமயம், அறிவியல், காலம் என அனைத்தையும் இணைத்துப் பார்க்கும் முயற்சி. மலையில் பிரபலமான ஒரு ஹோட்டல். அந்த ஹோட்டலில் வந்து தங்கும் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அந்தக் கொலைக்குக் காரணம் என்ன? யார் செய்தது? என்பதுதான் லைன். ஆனால், அதை வைத்து மனித மனங்களைப் படம் பிடித்திருக்கிறேன்.

எல்லோருக்கும் பிடித்த கதை சொல்லியாக மாறுவதுதானே சினிமாவின் மேஜிக்?

'சகமனிதனே கடவுள்... பசித்தவனுக்கு ரொட்டியே கடவுள்' என்று சொன்னவர்தான் காந்தி. அவரிடம் 'ஏன் ராம் என்னும் நாமத்தை உங்கள் பிரார்த்தனைகளில் வைத்திருக்கிறீர்கள்?' என்று கேட்டபோது, 'சக மனிதனை நோக்கிய கருணையே மதம்' என்பதுவே காந்தி கண்டடைந்த ஆன்மிகம். அதையே அவர் தன் வாழ்வில் கடைப்பிடிக்கத் தொடங்கினார்.

காந்தி குறித்து ஆய்வு செய்த அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பிரைன் டைபோவ்ஸ்கி, 'காந்தியின் ஆன்மிகம் என்பது வேதாந்த ஆன்மிகம் அல்ல. அது மக்களை ஒரு சமூகமாக இணைக்கும் முயற்சி. முதலில் நாட்டில் உள்ளவர்கள் சகோதர சண்டைகளை விட்டுவிட்டு ஒன்றிணைய மதம் துணையாகும் என்று நம்பினார். அதையே அவர் முன்னெடுத்தார்' என்கிறார். வாழ்க்கையில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்று உணர முடிந்தது.

இந்த உலகில் எது மாறாமல் நிலைத்திருக்குதோ அதுதான் தெய்வத்தன்மையுடையது. நம்முடைய எண்ணங்கள், அபிப்பிராயங்கள், குணங்கள், கோபங்கள், இன்ப துன்பங்கள், மதிப்பீடுகள் எல்லாமே மாறுகிறது. ஆனால், அன்பு மட்டும்தான் மாறாமல் நிலைத்திருக்கிறது. குறிப்பாக, ஓஷோ கடவுளைப் பற்றிப் பேசறதைவிட, கடவுள் தன்மையைப் பற்றித்தான் நிறைய பேசுவார். கதையில் விந்தையாக சில சம்பவங்கள் நடக்கும். அதை அறிவியலாகப் பார்த்தால் அறிவியல்... ஆன்மிகமாகப் பார்த்தால் ஆன்மிகம். மனிதமாகப் பார்த்தால் மனிதம்.

புதுமுகங்கள்தான் கிடைத்தார்களா?

எல்லாவற்றுக்கும் இங்கே முன் மாதிரிகள் உண்டு. இன்று உச்சத்தில் இருக்கிற சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மாதிரியான ஹீரோக்கள் ஒரு கட்டத்தில் புதுமுகங்கள்தான். இப்போது அவர்கள் இருக்கிற நிலையை அவர்களே ஒரு கட்டத்தில் உணர்ந்திருக்க மாட்டார்கள். அதுதான் சினிமா. ஒரு சின்ன கதை. ஆனால் நிறைய மெனக்கெடல்கள் வேண்டும். அதற்காக தேர்வு செய்தவர்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள்.

அறிமுக நடிகர் நிகில் ஹீரோ. துடிப்புள்ள இளைஞர். நல்ல நம்பிக்கை தந்து உழைத்தார். ஹீரோயின் ஹர்ஷா. இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, சாதனா, கவிதா விஜயன், கற்பகம் எனப் பலர் நடித்திருக்கிறார்கள். மும்பை மாடல் நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.