முகப்பு
தமிழ்மணி

பெண்ணியத்தின் முன்னோடி...

சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்களில் புரட்சிப் பெண் கவிதாயினியாகத் திகழ்ந்தவர் வெள்ளிவீதியார்.

Updated On : 1 டிசம்பர் 2013, 1:39 am IST
பகிர்:

சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்களில் புரட்சிப் பெண் கவிதாயினியாகத் திகழ்ந்தவர் வெள்ளிவீதியார். மற்ற பெண்பாற் புலவர்களோடு ஒப்பிடுகையில், படைப்பாலும் படைப்புச் சிந்தனையாலும் தனித்ததொரு அடையாளத்துடன் இலங்குபவர். ஆணாதிக்கம் மிகுந்த சங்க இலக்கிய சமுகச் சூழலில் எல்லாப் பெண்பாற் புலவர்களும் அதன் சாயலைக் கொண்டிருக்க, அதிலிருந்து விலகி பெண்ணின் உணர்வுகளுக்காகக் குரலை உயர்த்தியவர்.

"கணவனால் கைவிடப்பட்ட பெண் வெள்ளிவீதியார்' என்று ஒüவையார் குறிப்பிடுகிறார். வெள்ளிவீதியார் பாடல்களைக் கவனிக்கிற சூழலில், அதில் பெண் உணர்வுகள் தன்னுணர்ச்சி நிலையில் வெளிப்படுவது தலைமைப் பொருளாக நிற்கிறது.

இவருடைய கவிதைகளில், கணவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை, அதனால் படும் துன்பம், காமம் படுத்தும்பாடு என்பன விரிவாகப் பேசப்படுகின்றன. தன் காம உணர்வு வெளிப்பாடு மறுக்கப்பட்ட நிலையினை வெறுத்து, துணிவுபட காமம் படுத்தும்பாட்டைத் தன் பாடல்களில் வெளிப்படுத்துவது பெண்ணியத்தின் இன்றைக்கு விரிந்திருக்கிற சுதந்திரத்தின் தொடக்கமாகப் பார்க்கலாம்.

Advertisement

Advertisement

சங்க இலக்கியத்தில் மொத்தம் 13 பாடல்கள் மட்டுமே இவர் பாடியிருக்கிறார். அனைத்தும் பெண்ணியத்தின் முன்னோடிப் பாடல்களாகவே இருப்பதை உறுதி செய்யலாம்.

""இடிக்கும் கேளிர் நும்குறை ஆக

நிறுக்கல் ஆற்றினேர் நன்றுமன் தில்ல

ஞாயிறு காயும் வெவ்அறை மருங்கில்

கைஇல் ஊமன் கண்ணின் காக்கும்

வெண்ணெய் உணங்கல் போலப்

பரந்தன்று இந்நோய் நோன்று

கொளற்கு அரிதே''

சூரிய வெப்பத்தால் வெம்மை படர்ந்த பாறையின்மேல் கையில்லாத ஊமை தன் கண்ணினால் காக்கும் வெண்ணெய் உருகி அழிவதைப்போன்று இக்காம நோய் என்பால் பரவியுள்ளது. அதனைப் பொறுத்தல் அரிதான செயலாகும் என்கிறார்.

ஒளவையார் "நாணமில்லா பெருமரம்' என்று காமத்தைக் குறிப்பிடுகிறார். ஆனால், "நாணமில்லாத பெருமரம் அல்ல காமம்; அது இயல்பான ஒன்றே; அவ்வுணர்வை வெளிக்காட்டுவதே இயல்பென' வெள்ளிவீதியார் வெளிப்படையாகக் காட்டி, இவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு

வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments