அபிராமி பட்டரின் பண்புவமை!
அபிராமி என்பதற்கு எப்போது பார்த்தாலும் எல்லோருடைய மனத்தையும் ஈர்ப்பவள் என்பது பொருளாகும்.
அபிராமி என்பதற்கு எப்போது பார்த்தாலும் எல்லோருடைய மனத்தையும் ஈர்ப்பவள் என்பது பொருளாகும். பேரழகியான அவளை சுந்தரி, லலிதா என்ற பெயரிலும் அழைக்கின்றனர். அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாகயிருக்கிற அன்னையை ஒருமுறை பார்த்து விட்டால் அவளை மீண்டும் மீண்டும் பார்க்கச் செய்து விடுகிறாள் என்னும் காரணத்தால் திருக்கடவூரில் நின்று அருள்பாலிக்கிற அம்மையை அபிராமி என்று அழைக்கிறோம்.
அம்பிகை வழிபாட்டின் மேன்மை, அவளது திருநாமங்கள், உலகின் தாயாக விளங்குகிற அவளின் எளிவந்த தன்மை, அன்பராகி நிற்பவர்க்கு அருள்பாலிக்கும் கருணை ஆகியவற்றை விரிவாக விளக்குகிற நூலே அபிராமி பட்டர் இயற்றியருளிய அபிராமி அந்தாதி ஆகும். எழுத்தெண்ணிப் பாடவேண்டிய கட்டளைக் கலித்துறையில் அமைந்துள்ள பாடல்களைக் கொண்டுள்ள அந்த நூலின் முதல் பாடல் கீழ்க்காணும் விதமாக அமைந்துள்ளது.
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்,
உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது,
மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும
தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, என்றன்
விழுத்துணையே
செம்மையான நிறத்திலே குளிர்ந்த ஒளியைத் தருகிற இளங்காலைச் சூரியன், 'கண்டவுடன் வணங்கத் தோன்றும் உச்சித் திலகம், மாணிக்கத்தில் சிவப்பு நிறத்தோடு எப்போதும் வீசுகின்ற ஒளி, மாதுளம்பூவில் சிவந்த நிறத்தோடு மென்மை, குங்குமப்பூக் குழம்புச் சிவப்பு நிறத்தோடு மணமும் குளுமையும் நிறைந்ததாகவும் விளங்குவதையொட்டி மேற்கூறிய யாவும் அன்னையின் மேனிக்கு உவமையாக்கப்பட்டிருக்கின்றன. மின்னல் மட்டுமே நிறமில்லாவிட்டாலும் அம்பிகையின் மேனிக்கு உவமையாகக் கூறப்பட்டிருக்கிறது.
அம்பிகை வழிபாட்டில் சிவப்பு வண்ணமே விசேஷமாய் கொண்டாடப்படுகிறது. செங்கதிர், உச்சித் திலகம், மாணிக்கம், மாதுளம்போது, குங்குமப் பூக் கலவை அனைத்தும் செம்மை நிறத்தன.
அபிராமி பட்டர் காணும் பொருள்களை அம்பிகையின் மேனிக்கு உவமையாக்கி மகிழ்ந்தாலும், அதைப் பண்போடு இணைத்துப் பண்புவமையாக்கி வியக்க வைக்கிறார்.
பண்புக்கு அடிப்படை வண்ணம், வடிவம், அளவு, சுவை என்பனவாம். செங்கதிர், உச்சித் திலகம் இரண்டும் சிவப்பென்னும் வண்ணப் பண்பைப் பெற்றுச் சிறந்து விளங்குகிறது.
மாணிக்கம் செம்மையோடு வடிவப் பண்பைப் பெற்று உயர்ந்து நிற்கிறது. மாதுளம்போது செய்ய நிறமும் மென்மையொடு சிறியதான அளவுப் பண்பை உடையதும் ஆகிறது. குங்குமப் பூக் கலவை சிவந்ததாயும் சுவையெனும் பண்பைப் பெற்றுள்ளதை அறிய முடிகிறது.