மயில் வாகனர்
இரு பெரும் தேவியர்களான வள்ளியும், தெய்வயானையும் முருகப் பெருமானுடன் இணைபிரியாது வீற்றிருக்கின்றனர். ஆதி காலத்தில் மூவரைமே மயில் வாகனத்தில் ஒருசேர அமைத்து வழிபட்டனர்.
இரு பெரும் தேவியர்களான வள்ளியும், தெய்வயானையும் முருகப் பெருமானுடன் இணைபிரியாது வீற்றிருக்கின்றனர். ஆதி காலத்தில் மூவரைமே மயில் வாகனத்தில் ஒருசேர அமைத்து வழிபட்டனர். ஆனால் காலப்போக்கில் இருபெரும் தேவியரையும் முருகனுடன் அமைக்காமல், முருகன் மயில் மீது வீற்றிருக்கும்படியாகவும் தேவியர் இருவரும் அவனுக்கு இருபுறம் தனியே நிற்கும்படியாகவும் அமைத்தனர் என்றாலும் புராண மரபுகளையொட்டி இரண்டு தேவியரையும் வாகனங்களுடன் அமைக்கும் வழக்கத்தையும் சில கலைஞர்கள் மேற்கொண்டனர். அந்த வகையில் சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் ஆலயத்திலுள்ள சிங்காரவேலர் சந்நிதியில் முருகனுடன் அமைந்த தேவியர் யானை வாகனத்தில் வீற்றிருக்கின்றனர். திருச்சியை அடுத்த திண்ணியம், பாண்டிநாட்டுத் தலமான குன்றக்குடி ஆகிய ஊர்களில் உள்ள முருகன் ஆலயங்களில் கருவறையில் முருகன், வள்ளி, தெய்வயானை ஆகிய மூவரும் தனித்தனியே மூன்று மயில்களில் அமர்ந்துள்ளனர். சில தலங்களில் முருகன் வீதியுலாவிற்கு எழுந்தருளும் போது வள்ளியும்-தெய்வயானையும் தனித்தனி மயில்களின் மீது உலா வருவதைக் காணலாம்.
பார்வதி தேவியார் பச்சையம்மன் என்ற பெயரில் தவம் செய்ய கங்கை முதல் குமரி வரை பயணம் செய்ததாக நாட்டுப் புறக் கதைகள் கூறுகின்றன. அவள் பயணத்தின்போது தங்கிய இடங்களே பச்சையம்மன் கோயில்களாகக் கருதப்படுகின்றன. பார்வதிதேவியின் தவத்திற்குத் துணையாக மருமகளான வள்ளியம்மையும் வந்தாளாம். அவளே வனக்குறத்தி எனும் தெய்வமாக கொண்டாடப்படுகின்றாள். அவள் மயில் மீது அமர்ந்தவளாக அழகுறக் காட்சியளிக்கிறாள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.