முகப்பு
வெள்ளிமணி

வக்ரசாந்தி அருளும் தலம்!

"வராகநதி'  எனப்படும் "சங்கராபரணி'  ஆற்றின் கரையில் இருக்கும் இத்தலத்துக்கு வக்கிரபுரி என்று பெயர்.

Updated On : 9 டிசம்பர் 2022, 5:45 pm IST
பகிர்:

"வராகநதி'  எனப்படும் "சங்கராபரணி'  ஆற்றின் கரையில் இருக்கும் இத்தலத்துக்கு வக்கிரபுரி என்று பெயர்.  வக்கிரன் வழிபட்ட தலம். வராகநதியின் வலிய கரையையுடைய இடமாதலின் வற்கரை } வக்கரை என்றாயிற்று.

குண்டலினி மகரிஷி என்ற முனிவர் இங்கு வாழ்ந்தார். அவரது பேரன் வக்கிராசூரன் அரிய வரம் பெற,  கடுந்தவம் புரிந்தான்.  ஈசன் தோன்றவே, தேவர் மூவராலும் அழிக்க முடியாமலும், சிவலிங்கத்தை எப்போதும் தன் கண்டத்தில் வைத்திருக்கவும் வரம் கேட்டான். அப்போது ஈசன், "அசைவ உணவு ஆகாதே'  என்று கூற,  "காலையில் பூஜை முடித்து உணவு உண்ட பிறகே சிவலிங்கத்தை கண்டத்தில் வைப்பேன்' என்றான்.  ஈசனும்  வரத்தை அளித்தார். 

வரம் பெற்றதும் மமதையில் தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் பிரம்மாவிடம் செல்ல, அவர் மகா விஷ்ணுவிடம் முறையிட்டார். அதன்படி ஈஸ்வரியிடம் மகா விஷ்ணு,  "அவன் அழிய வேண்டியவனாகிறான்.   என்னால் நேரில் சென்றுஅழிக்க முடியாது.  அவன் லிங்கத்தை கண்டத்தில் வைத்திருக்கும்போது அழிக்க முடியாது. பூஜை முடிந்து அசைவ உணவு உண்ண கடல்வழி செல்லும்போது,  அசுரன் தன் தங்கை துன்முகியின் காவலில் "கண்டலிங்கத்தை' வைப்பான். அசுரனின் சகோதரியை முதலில் அழித்து பின் அவனையும் அழிக்க வேண்டும்'' என்றார்.

Advertisement

Advertisement

அப்போது துன்முகி கர்ப்பமாக இருக்கவே குழந்தை வதம் கூடாது என்ற தர்மப்படி, சந்திரமெüலீஸ்வரர் வணங்கி துன்முகியின் வயிற்றில் கருவிலுள்ள குழந்தையை எடுத்து காளி தனது வலது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு சம்ஹாரம் செய்தாள். பின்னர்,  காளி திருக்கோயிலின் முன்புறம் ராஜகோபுரத்தின் சமீபமாக வடக்கு முகமாக அமர்ந்தாள். அவளுக்கு வக்கிரகாளி என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

கோயிலின் சிறப்பு: ஆதிசங்கரர் காளியை சாந்தப்படுத்தி இடது பாதத்தில் ஸ்ரீ சக்ரராஜ இயந்திரத்தை பிரதிஷ்டை செய்தார் எனப்படுகிறது. ராகு}கேது கிரகங்களுக்கு அதிதேவதை காளி என்பதால் வலதுபுறம் 5 முறை இடப்புறம் 4 முறை என சுற்றி வந்து வழிபட வேண்டும். காளி கோயில் ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகிலேயே இருப்பது மாறுபட்டஅமைப்பாகும். வக்கிர காளியின் திருவுருவம் சுடர் விட்டு பறக்கும் தீக்கதிர்களை உடைய தலை, மண்டைஓட்டுக்கிரீடம், வலது காதில் சிசுவின் குண்டலம், வலப்புறக் கைகளில் பாசம், சக்கரம், வாள், கட்டாரி, கபாலம், போன்றவற்றுடன் அருளுகிறாள். 

காளி அம்மன் வக்கிர நிலையில் இருப்பதால்தான் சந்திரமௌலீஸ்வரர் கோயிலும் வக்கிரகதி அமைப்பில் அமைந்திருக்கிறது. திருவக்கரைக் கோயிலில் ராஜகோபுரம், கொடிமரம், நந்தி, கருவறையில் குடிகொண்டிருக்கும் சந்திரமௌலீஸ்வரர் ஆகியவை ஒரே நேர்க் கோட்டில் இல்லாமல் ஒன்றிலிருந்து ஒன்று விலகி மாறுபட்ட நிலையில் அமைந்துள்ளன.

மூலவர் சந்திரசேகரேஸ்வரர், சந்திரமெüலீஸ்வரர் என்பதாகும்.  இறைவன் சதுர அடிப்பாகத்தின் மீதமைந்த வட்டமான ஆவுடையாரில் உள்ள மூலவர் அழகிய மும்
முகத்துடன் விளங்குகின்ற கம்பீரமான தோற்றம்.  

அம்பாள்அமிர்தேஸ்வரி, வடிவாம்பிகை என வணங்கப்படுகிறார். தல மரமாக வில்வமும், தீர்த்தம் பிரமதீர்த்தம், சந்திரதீர்த்தம், சூரிய தீர்த்தம் என்பனவாகும்.  உள்பிரகாரத்தில் குண்டலினி முனிவர் சந்நிதியில் முனிவரின் சமாதி மீது சிவலிங்கம் உள்ளது. அர்த்த மண்டபத்தில் உத்ஸவர் நடராசர் கால் மாறியாடும் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்; தூக்கிய திருவடி இடுப்பு வரை உயர்ந்துள்ளது. இவ்வகை "வக்கிர தாண்டவம்' என்று பெயர். மேற்கு நோக்கிய திருமால் நின்ற கோலத்தில் அருளுகிறார். நவக்கிரகச் சந்நிதியில் சனிபகவானின் வாகனமாகிய காகம் வழக்கத்திற்கு மாறாக தென்புறம் நோக்கியுள்ளது.

பிரார்த்தனைகள்: கிரக தோஷங்கள், காரியத்தடைகள்,  பூர்வஜென்ம பாவங்கள், தோஷங்கள் உள்ளிட்டவை விலகி, மனமும், உடலும் அமைதி பெறும்.  திருமணம் ஆகாதவர்கள், குழந்தைப்பேறு இல்லாதவர்கள்  பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மனை வணங்குகின்றனர். காளி சந்நிதி எதிரில் உள்ள தீபலட்சுமி அம்மனுக்கு  திருமாங்கல்ய கயிறு கட்டி எலுமிச்சம் பழ 
தீபம் ஏற்றுவது வழக்கம். கோரிக்கை சீட்டு எழுதி சூலத்தில் கட்டுவதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கும்பாபிஷேகம்:  இந்தக் கோயில் கும்பாபிஷேகம் டிச. 11-ஆம் தேதி காலை 10.50}க்கு மேல் 11.30-க்குள் நடைபெற உள்ளது.                                                        

திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வழியில் பெரும்பாக்கம் என்ற இடத்தில் இறங்கி, திருவக்கரை கோயிலை அடைந்து தரிசிக்கலாம்.

தொடர்புக்கு}  0413 2680870, 9600285993

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments