இலங்கை நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் தமிழர் கட்சிகள் பங்கேற்க வேண்டும்
இலங்கை நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழர் கட்சிகள் பங்கேற்க வேண்டும் என்று மாநிலங்களவை பாஜக துணைத் தலைவர் ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழுவினர் வேண்டுகோள் விடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழர் கட்சிகள் பங்கேற்க வேண்டும் என்று மாநிலங்களவை பாஜக துணைத் தலைவர் ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழுவினர் வேண்டுகோள் விடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இதேபோன்ற கருத்தை முன்வைத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இலங்கையில் கடந்த வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரவிசங்கர் பிரசாத், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வேண்டும், வடக்கு மாகாண கவுன்சிலில் சுதந்திரமான, நியாயமான முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்று அதிபர் ராஜபட்சவிடம் வலியுறுத்தினார்.
Advertisement
அதே போன்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்து பேசிய அவர், இலங்கை நாடாளுமன்றத் தேர்வுக் குழு உள்ளிட்ட ஜனநாயக ரீதியிலான அமைப்புகளில் பங்கேற்று தங்கள் தரப்பு கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இருதரப்பும் பிடிவாதத்தை தளர்த்தினால்தான், தமிழர்களின் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொண்ட பின்புதான், நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைக்கப்படும் என்று முன்பு அளித்திருந்த வாக்குறுதியை ராஜபட்ச மீறிவிட்டார் என்பதால், அக்குழுவில் பங்கேற்க முடியாது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பங்கேற்க முடிவு:÷இதற்கிடையே கடந்த வாரம் இந்தியா வந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஆறுமுகம் தொண்டைமான், தலைவர் முத்துசிவலிங்கம் ஆகியோர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக முத்துசிவலிங்கம் கூறியதாவது:
இலங்கை நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பங்கேற்க வேண்டும். அதன் மூலம், அதிகாரப் பகிர்வு தொடர்பாக தீர்வேதும் கிடைக்கிறதா என்பதை அறிய வேண்டும் என்று சோனியா காந்தி கூறினார். அக்குழுவில் நாங்கள் பங்கேற்போம் என அவரிடம் தெரிவித்துள்ளோம்.
மேலும், இலங்கையில் உள்ள தோட்டத் தொழிலாளர்களின் நிலையை அறிய காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுவை விரைவில் அனுப்புவதாக சோனியா காந்தி உறுதி கூறியுள்ளார்'' என்றார் முத்துசிவலிங்கம்.