முஷாரப் மீதான தேசத் துரோக வழக்கை தொடர்ந்து நடத்த பாகிஸ்தான் அரசு முடிவு
பாகிஸ்தான் முன்னாள் அதிபரும் சர்வாதிகாரியுமான பர்வேஸ் முஷாரப் மீதான தேசத்துரோக வழக்கை தொடர்ந்து நடத்துவது என பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான புதிய அரசு முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபரும் சர்வாதிகாரியுமான பர்வேஸ் முஷாரப் மீதான தேசத்துரோக வழக்கை தொடர்ந்து நடத்துவது என பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான புதிய அரசு முடிவு செய்துள்ளது.
அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வகிக்கும் அமைச்சர் ஒருவர் அந்நாட்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை தெரிவித்தார். இதன்மூலம், பாகிஸ்தான் வரலாற்றில் தேசத்துரோக வழக்கு விசாரணையை எதிர்கொள்ளப் போகும் முதல் சர்வாதிகாரி முஷாரப்தான்.
முஷாரப் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் தûலைமையிலான அரசு செயல்படுத்தும் என அந்த அமைச்சர் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
முஷாரப் மீதான வழக்கு விசாரணைக்கு அரசு ஒத்துழைப்பு வழங்கும் என நவாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்பதற்கு முன்பு கூறியிருந்தார். அவரது கருத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைச்சர் ஒருவரும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ கொலை வழக்கு, பலுசிஸ்தான் தேசியவாத கட்சித் தலைவர் அக்பர் பக்டி கொலை வழக்கு மற்றும் 2007ஆம் ஆண்டில் அவசர நிலையை பிரகடணம் செய்து நீதிபதிகளை கைது செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் முஷாரப் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் மீது தேசத்துரோக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிபர் பதவியிலிருந்து விலகிய பிறகு முஷாரப் லண்டனில் வசித்து வந்தார். வழக்கு விசாரணைக்காக அவரை நாடு கடத்துமாறு விடுத்த பாகிஸ்தான் அரசின் கோரிக்கையை பிரிட்டன் ஏற்கவில்லை.
இந்நிலையில், கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் பங்கேற்பதற்காக முஷாரப் ஜாமீன் பெற்று நாடு திரும்பினார். ஜாமீன் முடிந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவரது வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது.
இதற்கிடையே முன்னாள் அட்டர்னி ஜெனரல் இர்பான் காதிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், முஷாரப் மீதான தேசத்துரோக வழக்கை தொடர்ந்து நடத்த இடைக்கால அரசு விரும்பவில்லை என கூறியிருந்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அரசு இதுகுறித்து முடிவு செய்யும் எனவும் கூறியிருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, இப்போதைய அட்டர்னி ஜெனரல் முனிர் ஏ.மாலிக் முஷாரபை சந்தித்துப் பேசினார். முஷாரப் மீதான தேசத்துரோக வழக்கில் 24ஆம் தேதி விசாரணை நடைபெற உள்ள நிலையில், என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
முஷாரப் மீதான தேசத்துரோக வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தினால் அரசுக்கும் ராணுவத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும் எனத் தெரிகிறது. ஏனென்றால், முன்னாள் ராணுவத் தளபதியான முஷாரப் தண்டிக்கப்படுவதை ராணுவம் விரும்பாது என்று கூறப்படுகிறது.