ஜப்பான் நாடாளுமன்ற மேலவைத் தேர்தல்: பிரதமர் ஷின்சோ அபே அமோக வெற்றி
ஜப்பான் நாடாளுமன்ற மேலவைத் தேர்தலில் அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபே அமோக வெற்றி பெற்றுள்ளார்.
ஜப்பான் நாடாளுமன்ற மேலவைத் தேர்தலில் அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபே அமோக வெற்றி பெற்றுள்ளார்.
ஜப்பான் நாடாளுமன்ற மேலவையில் 242 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கும் மொத்தமுள்ள இடங்களில் பாதி இடங்களுக்குத் தேர்தல் நடத்தப்படுகிறது.
அதன்படி மேலவைக்கு சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்தலின் சில சுற்று நிலவரங்கள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில், பிரதமர் ஷின்சோ அபே அதிக வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் அவரது சுதந்திர ஜனநாயகக் கட்சிக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது.
Advertisement
Advertisement
தேர்தல் நடைபெற்ற 121 இடங்களில் அக்கட்சிக்கு 71 முதல் 80 இடங்கள் வரை கிடைக்கும் என்று தெரிய வருகிறது. ஏற்கெனவே கீழவையில் பெரும்பான்மை கொண்டுள்ள அக்கட்சிக்கு இது புதுத் தெம்பையும், அரசுக்கு ஸ்திரத்தன்மையையும் அளித்துள்ளது. இதனால், ஷின்சோ அபேவுக்கு முன் பிரதமராக குறுகிய காலமே இருந்த 6 பேருக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் சட்டங்களை இயற்றுவதில் இருந்த தடை அவருக்கு இருக்காது.
கடந்த 20ஆண்டுகளாக சரிவில் இருக்கும் ஜப்பானின் பொருளாதாரத்தைச் சீரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஷின்சோ அபேவுக்கு இந்த வெற்றி உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த துணை அதிபர் மசாஹிகோ கொமூரா கூறுகையில், ""பெரும்பாலான வாக்காளர்கள் முடிவுகளை எடுக்கக் கூடிய அரசியலையும், அரசியல் ஸ்திரத்தன்மையையும் விரும்பியுள்ளனர். அதனால்தான் எங்கள் கட்சிக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது'' என்றார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற கீழவைத் தேர்தலில் வென்று பிரதமர் ஷின்சோ அபேவின் சுதந்திர ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்தது. அதிலிருந்து அவர் பல்வேறு பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.