செப்டம்பர் 21-ல் இலங்கை வடக்கு மாகாண கவுன்சில் தேர்தல்
இலங்கை வடக்கு மாகாண கவுன்சில் தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இலங்கை வடக்கு மாகாண கவுன்சில் தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மத்திய, வடமேற்கு மாகாண கவுன்சிலுக்கும் அதே நாளில் தேர்தல் நடைபெறவுள்ளது.
விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்த நிலையில், வடக்கு மாகாண கவுன்சிலுக்கு முதன் முறையாக இப்போது தேர்தல் நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
1988-ல் வடகிழக்கு மாகாணத்துக்கான தேர்தல் நடைபெற்றது. அதன் பின், 2006-ம் ஆண்டு இரு மாகாணங்களும் பிரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத் தேர்தல் 2008-ல் நடைபெற்றது. இப்போது வடக்கு மாகாணத்துக்கு தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 21-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்யும் பணி வியாழக்கிழமை மதியம் 12 மணியுடன் நிறைவடைந்தது.
அதிபர் ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கும், தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையே பிரதான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் முதல்வர் பதவிக்கான வேட்பாளராக முன்னாள் நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிறுத்தப்படுவார் எனத் தகவல் வெளியானது. ஆனால், அதற்கு அவர் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
முன்னதாக மாகாண கவுன்சிலுக்கான நிலம், போலீஸ் தொடர்பான அதிகாரத்தைப் பறிக்க வேண்டும் என்று ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தின. அதற்கான நடவடிக்கைகளிலும் அதிபர் மகிந்த ராஜபட்ச தலைமையிலான அரசு ஈடுபட்டது.
எனினும், மாகாண கவுன்சிலுக்கு அதிக அதிகாரமளிக்கும் வகையில் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி கொண்டு வரப்பட்ட 13-வது சட்டத்திருத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அதில், மாற்றம் ஏதும் கொண்டு வரக்கூடாது என்று இந்தியா சமீபத்தில் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.