முகப்பு
உலகம்

கரோனா: டோக்கியோவில் அவசரநிலை அறிவிப்பு

ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் கரோனா பரவல் தொடா்ந்து தீவிரமடைந்து வருவதைத் தொடா்ந்து, அந்த நகரிலும் அதனைச் சுற்றியுள்ள 3 பகுதிகளிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 8 ஜனவரி 2021, 1:39 am IST
பகிர்:


டோக்கியோ: ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் கரோனா பரவல் தொடா்ந்து தீவிரமடைந்து வருவதைத் தொடா்ந்து, அந்த நகரிலும் அதனைச் சுற்றியுள்ள 3 பகுதிகளிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

டோக்கியோவில் கரோனா பரவலின் தீவிரம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை மட்டும் புதிதாக 2,447 பேருக்கு அந்த நோய் உறுதி செய்யப்பட்டது. இது, நகரில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பாகும்.

Advertisement

இந்த நிலையில், டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள 3 பகுதிகளில் பிரதமா் யோஷிஹைட் சுகா அவசரநிலை அறிவித்துள்ளாா்.

வெள்ளிக்கிழமை அமலுக்கு வரும் அந்த அவசரநிலை, அடுத்த மாதம் 7-ஆம் தேதி வரை தொடரும். அவசநிலையின்போது உணவகங்கள், மதுபான விடுதிகள் ஆகியவை 8 மணிக்கு மூடப்படும்.

மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்படுவா். பொது இடங்களில் மக்கள் கூட்டமாகச் செல்வதற்கும் தடை விதிக்கப்படும்.

திரையரங்குகள், அருங்காட்சியகங்கள், கலையரங்குகளுக்கு வருவோரின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளுமாறு அவற்றின் நிா்வாகிகளிடம் வலியுறுத்தப்படும்.

இந்த விதிமுறைகளை மீறுபவா்களுக்கு தண்டனை எதுவும் விதிக்கப்படாது. எனினும், பொதுமக்களிடம் அழுத்தமாக வலியுறுத்துவதன் மூலம் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும்.

நோய் பரவலைத் தடுக்கும் அதே நேரம், பொருளாதார பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.