முகப்பு
உலகம்

காஸா தேவாலயம் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் விளக்கம்!

காஸாவின் ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவத்தின் விளக்கம்...

Updated On : 23 ஜூலை, 2025 at 12:36 PM
காஸாவின் ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். - எக்ஸ்
பகிர்:

காஸா நகரத்திலுள்ள ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீது தற்செயலாகத் தாக்குதல் நடத்தப்பட்டதாக, இஸ்ரேல் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

காஸாவிலுள்ள ஒரேயொரு கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த, ‘ஹோலி ஃபேமிலி’ எனும் தேவாலயத்தின் மீது கடந்த வாரம் இஸ்ரேல் ராணுவம் ஷெல் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலின் தாக்குதல்களில் இருந்து உயிர்பிழைத்து, கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சுமார் 600-க்கும் மேற்பட்டோர் தஞ்சமடைந்திருந்த அந்தத் தேவாலயத்தின் மீதான தாக்குதலில், 3 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில், 10 பேர் படுகாயமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், தேவாலயத்தின் கட்டடம் பலத்த சேதமடைந்துள்ளது. இதையடுத்து, இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு போப் பதினான்காம் லியோ உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட உள் விசாரணையில், வெடிப் பொருள்களைத் தவறாகப் பயன்படுத்தியதனால், தேவாலயத்தின் மீது தற்செயலாகவே தாக்குதல் நடத்தப்பட்டதாக, இஸ்ரேல் ராணுவம் இன்று (ஜூலை 23) தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்தத் தாக்குதலுக்குப் பின், வாடிகனின் முக்கிய தலைவர்கள் காஸா தேவாலயத்துக்குச் சென்று பாதிப்புகளைப் பார்வையிட்டனர். அப்போது, இஸ்ரேலின் தாக்குதல்களில் காஸா முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளது என அவர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: துருக்கியில்.. ரஷியா - உக்ரைன் இடையில் 3-ம் சுற்று அமைதிப்பேச்சு!

summary

The Israeli military said it had accidentally struck the only Catholic church in Gaza City.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.