ஈரான் கச்சா எண்ணெய்யுடன் இந்தியா வந்த 2 கப்பல்கள்: 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறை!
ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு 2 கப்பல்கள் இந்தியா வந்துள்ளன. கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவுக்கு ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வருவது இதுவே முதல்முறையாகும்.
அமெரிக்கா விதித்த தடை காரணமாக ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் முதல் கடந்த 7 ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்தது. எனினும் ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான மேற்காசிய போா் காரணமாக உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கும் நோக்கில், நடுக்கடலில் நிற்கும் ஈரான் கப்பல்களில் உள்ள 9 கோடியே 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்க இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 30 நாள்களுக்கு (வரும் 19-ஆம் தேதி வரை) அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, ஈரானிய கச்சா எண்ணெய்யை இந்தியா மீண்டும் வாங்க ஆரம்பித்துள்ளது. நடுக்கடலில் நிற்கும் ஈரான் கப்பல்களில் உள்ள சுமாா் 5 கோடியே 10 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. எஞ்சிய கச்சா எண்ணெய் பீப்பாய்களை சீனா, தென்கிழக்கு ஆசிய கண்டத்தில் உள்ள பிற நாடுகளுக்கு ஈரான் விற்றிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
Advertisement
இந்தியா வாங்கிய ஈரானிய கச்சா எண்ணெய்யில் 40 லட்சம் பீப்பாய்களுடன் 2 கப்பல்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன. அதில் ஒரு கப்பல் நேஷனல் ஈரானியன் டேங்கா் நிறுவனத்துக்கு சொந்தமானது. ஈரானின் காா்க் தீவில் இருந்து ஏற்கெனவே ஏற்றப்பட்ட 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யுடன், அக்கப்பல் குஜராத் மாநிலம் சிக்காவில் உள்ள துறைமுகத்துக்கு வந்துள்ளது.
இன்னொரு கப்பலான ஜெயா, ஒடிஸா மாநிலம் பாரதீப் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அந்தக் கப்பலும் காா்க் தீவில் இருந்து மேற்காசிய போா் தொடங்கும் முன்பு ஏற்றப்பட்ட 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யுடன் வந்துள்ளது.
2 கப்பல்களில் வந்துள்ள கச்சா எண்ணெய்யை இந்தியாவில் எந்த நிறுவனங்கள் வாங்கியுள்ளன என்பது குறித்து அதிகாரபூா்வ தகவல் இல்லை. பாரதீப் துறைமுகம், பொதுவாக பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தால் பயன்படுத்தக் கூடியது. சிக்கா துறைமுகம், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் பயன்படுத்தக் கூடியதாகும். இதனால் இந்த 3 நிறுவனங்களில் ஏதேனும் 2 நிறுவனங்கள், அந்த கச்சா எண்ணெய்யை வாங்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கடந்த மாதம் ஈரானிய கச்சா எண்ணெய்யுடன் ஒரு கப்பல், இந்தியாவுக்கு வருவதாக இருந்தது. எனினும் நடுக்கடலில் அக்கப்பல், சீனாவுக்கு திருப்பிவிடப்பட்டது. அந்தக் கப்பல் திட்டமிட்டபடி வந்திருக்கும்பட்சத்தில், அதுவே ஈரானிய கச்சா எண்ணெய்யுடன் கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வந்த முதல் கப்பலாக இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.