இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்
மொத்தம் 10 போர்களை இதுவரை தாம் நிறுத்தியிருப்பதாக டிரம்ப் அறிவிப்பு!
இஸ்ரேல் - லெபனான் இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை(ஏப். 16) இரவில் அறிவித்தார்.
லெபனானில் கடந்த ஒரு மாதமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2,000-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா்.இச்சூழலில், அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ முன்னிலையில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய நேரடி அமைதிப் பேச்சுவாா்த்தையில் லெபனான், இஸ்ரேல் தூதா்கள் பங்கேற்றனா். அதன் வெளிப்பாடாக, வியாழக்கிழமை(ஏப். 16) இரவில் போர்நிறுத்தம் உடன்படிக்கையானது.
இது குறித்து, டிரம்ப் இன்று(ஏப். 16) வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘இஸ்ரேல் - லெபனான் இடையே நாளை (ஏப். 17) அதிகாலை முதல் அடுத்த 10 நாள்களுக்கு போர்நிறுத்தம் அமலில் இருக்குமென்றும் சுமார் 34 ஆண்டுகளுக்குப் பின், அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் மேற்குறிப்பிட்ட இவ்விருதரப்பும் நேரடியாகச் சந்திப்பில் ஈடுபட்டதாகவும்’ தெரிவித்தார். லெபனான் - இஸ்ரேல் சண்டையுடன் சேர்த்து மொத்தம் 10 போர்களை இதுவரை தாம் நிறுத்தியிருப்பதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Advertisement