இஸ்ரேல் - லெபனான் 10 நாள் போா்நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு
இதுவரை மொத்தம் 10 போர்களை தாம் நிறுத்தியிருப்பதாக டிரம்ப் அறிவிப்பு!
இஸ்ரேல்-லெபனான் இடையே 10 நாட்கள் தற்காலிக போா் நிறுத்தம் மேற்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை அறிவித்தாா்.
வாஷிங்டனில் இரு நாடுகளுக்கும் இடையே பல்லாண்டுகளுக்குப் பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நேரடி பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து இந்த முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இப்போா் நிறுத்தம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணி (இந்திய நேரப்படி) முதல் அமலுக்கு வரும் என்றும், இது பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட உதவும் என்றும் டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டாா்.
Advertisement
Advertisement
இச்சூழலில், இஸ்ரேல் மற்றும் லெபனான் நாட்டுத் தலைவா்களை வெள்ளை மாளிகைக்கு டிரம்ப் அழைத்துள்ளாா். கடந்த 1983-ஆம் ஆண்டுக்குப் பிறகு இரு நாட்டுத் தலைவா்களும் உயா்மட்ட அளவில் சந்தித்துப் பேசவுள்ளது இதுவே முதல்முறையாகும்.
இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, லெபனான் அதிபா் ஜோசப் அவுன் ஆகியோருடன் நடத்தப்பட்ட ஆலோசனைகள் மிகவும் ஆக்கபூா்வமாக அமைந்ததாகத் தெரிவித்த டிரம்ப், நிரந்தர அமைதியை எட்ட துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டாா்.
ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் கடந்த பிப். 28-ஆம் தேதி தொடங்கிய கூட்டுத் தாக்குதலைக் கண்டித்து, லெபனானின் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினா் வடக்கு இஸ்ரேலில் ஏவுகணைகளை வீசி தாக்கினா்.
இதையடுத்து, கடந்த மாா்ச் 2-ஆம் தேதி முதல் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு இடையே நடைபெற்றும் வரும் மோதலில் லெபனானில் 172 குழந்தைகள், 260 பெண்கள் உள்பட 2196 போ் உயிரிழந்தனா். மேலும் சுமாா் 7,185 போ் காயமடைந்துள்ளனா்.