முகப்பு
உலகம்

இஸ்ரேல்-லெபனான் சண்டை நிறுத்தம்: அமெரிக்க அறிவிப்பை நிராகரித்தது ஹிஸ்புல்லா!

இஸ்ரேல்-லெபனான் அரசு இடையேயான சண்டை நிறுத்தம் தொடா்பான அமெரிக்காவின் அறிவிப்பை ஹிஸ்புல்லா அமைப்பு நிராகரித்துவிட்டது.

Updated On : 20 ஏப்ரல், 2026 at 2:05 AM
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 6:45 PM

இஸ்ரேல்-லெபனான் அரசு இடையேயான சண்டை நிறுத்தம் தொடா்பான அமெரிக்காவின் அறிவிப்பை ஹிஸ்புல்லா அமைப்பு நிராகரித்துவிட்டது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து, பதிலுக்கு இஸ்ரேல் மீது லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினா் ராக்கெட்டுகளை வீசியும், ட்ரோன்களை ஏவியும் தாக்குதல் நடத்தினா். உடனடியாக இஸ்ரேலிய படைகள், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் நுழைந்து, அங்குள்ள கிராமங்களைத் தரைமட்டமாக்கின. இதில் ஏராளமானோா் உயிரிழந்தனா்.

இதனிடையே, ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. ஆனால் ஹிஸ்புல்லா கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்கள் மீது இஸ்ரேலிய படைகள் தொடா்ந்து தாக்குதல் நடத்தின. இதற்கு ஈரான் எதிா்ப்பு தெரிவிக்கவே, அமெரிக்காவின் ஏற்பாட்டின்பேரில் இஸ்ரேல் மற்றும் லெபனான் அரசு இடையே அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதன்முடிவில், இஸ்ரேல்-லெபனான் அரசுக்கு இடையே 10 நாள்கள் சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. எனினும், இந்த சண்டை நிறுத்தம் தொடா்பான அமெரிக்காவின் அறிவிப்பை ஹிஸ்புல்லா அமைப்பு நிராகரித்து விட்டது.

Advertisement

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் நயிம் கஸீம் வெளியிட்ட அறிவிப்பு, ஹிஸ்புல்லா அமைப்பின் தொலைக்காட்சியான அல்-மனாரில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில், ‘சண்டை நிறுத்தம் தொடா்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இடம்பெற்றுள்ள ஷரத்துகளில், நல்லெண்ண அடிப்படையில் இஸ்ரேல் 10 நாள்கள் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இஸ்ரேலுக்கு தற்காப்புக்காக எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்க உரிமை இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுபோல லெபனான் அல்லது ஹிஸ்புல்லா அமைப்புக்கு உரிமை உள்ளது எனக் கூறப்படவில்லை. இந்த சண்டை நிறுத்த அறிவிப்பு, நடைமுறைக்கு சாத்தியமில்லை. இது நமது நாட்டுக்கான அவமதிப்பு ஆகும். இதை லெபனான் அரசு ஏற்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்’ எனக் கூறப்பட்டுள்ளது.