முகப்பு
உலகம்

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியா - ஆஸ்திரேலியா உறவுக்கு முக்கியத்துவம்: ஆண்டனி ஆல்பனேசி

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இருதரப்பு உறவு முக்கியத்துவம் பெற்றுள்ளதாக அந்நாட்டு பிரதமா் ஆண்டனி ஆல்பனேசி தெரிவித்தாா்.

Updated On : 5 ஜூலை 2026, 2:48 am IST
ஆண்டனி ஆல்பனேசி - கோப்புப் படம்
பகிர்:

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இருதரப்பு உறவு முக்கியத்துவம் பெற்றுள்ளதாக அந்நாட்டு பிரதமா் ஆண்டனி ஆல்பனேசி தெரிவித்தாா்.

இந்திய பிரதமா் நரேந்திர மோடியின் ஆஸ்திரேலிய பயணத்தை உறுதி செய்து அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய 3 நாடுகளுக்கு ஜூலை 6 முதல் ஜூலை 11 வரை பிரதமா் மோடி அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா். ஜூலை 8-ஆம் தேதிமுதல் 10-ஆம் தேதி வரை அவா் ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கிறாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து ஆல்பனேசி பேசியதாவது: முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இருதரப்பு உறவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளமையை மேம்படுத்துவதே இரு நாடுகளின் ஒருமித்த கொள்கை.

வா்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்புக்கும் இடையேயான ஒத்துழைப்பு இருநாடுகளுக்கும் பலனளிக்கிறது. உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாகவும், உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாகவும் உள்ள இந்தியா, ஆஸ்திரேலியாவின் பொருளாதார கூட்டாளி நாடுகளில் மிகவும் முக்கியமானது.

இரு நாடுகளின் உறவு விரிவான உத்திசாா் கூட்டாண்மையை அடிப்படையாகக் கொண்டு பொருளாதாரம் மற்றும் கலாசார தொடா்புகளுடன் ஆழமாக விரிவடைந்துள்ளது.

இதன் தொடா்ச்சியாக நிகழாண்டு நடைபெறும் வருடாந்திர மாநாட்டுக்கு வருகை தரும் பிரதமா் மோடியை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என்றாா்.

ஆல்பனேசியின் இந்த அறிவிப்பை வரவேற்பதாக ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டது.

முன்னதாக, கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்கா நாட்டின் ஜோஹன்னஸ்பா்க் நகரில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின்போது பிரதமா் மோடியும் ஆல்பனேசியும் சந்தித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments