என் மகன் எலக்ட்ரீஷியன் டிப்ளமோ படித்து இருக்கிறார். அவருக்கு அரசு வேலை அல்லது தனியார் துறையில் வேலை கிடைக்குமா? வெளிநாட்டுக்கு அனுப்பலாமா?
வாசகர், விருதாச்சலம்.
உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். லக்னம், ஆறாமதிபதி செவ்வாய் பகவான் ஒன்பதாம் வீட்டில் நீச்ச பங்க ராஜயோகம் பெற்று சுக்கிர பகவானுடன் இணைந்திருக்கிறார். இரண்டாம் வீட்டிற்கும், ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் இரண்டாம் வீட்டிலேயே மூலத் திரிகோணம் பெற்று ஐந்தாம் பார்வையாக ஆறாம் வீட்டையும், ஏழாம் பார்வையாக எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும் சந்திர பகவானையும் (கஜகேசரி யோகம்) ஒன்பதாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் சூரிய பகவானையும் (சிவராஜயோகம்) புத பகவானையும் பார்வை செய்கிறார். மூன்று, நான்காம் வீட்டிற்கதிபதியான சனி பகவான் ஐந்தாம் வீட்டில் கேது பகவானுடன் இணைந்திருக்கிறார். அரசு கிரகங்கள் வலுவாக இருப்பதால் அரசு சம்பந்தமான வேலை கிடைத்துவிடும். தற்சமயம் சனி மஹா தசையில் கேது பகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் தகுதியான அரசு வேலை கிடைத்துவிடும். இன்னும் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டாகும். பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.