மனதில் பூத்த மலர்கள்
டாக்டர் நா மகாலிங்கம், ஓம் சக்தி மாத இதழில் எழுதப்பட்டு வந்த தலையங்கங்களில் சிலவற்றைத் தொகுத்து வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலை சமீபத்தில் படித்தேன்.
பதினெட்டு கட்டுரைகளின் தொகுப்பில் நதிகள் இணைப்புக்கு தேசிய மாநாடு, அரசியல் சட்டத்திருத்தம் அவசியமே, சர்வதேச பயங்கரவாதிகளே! சத்யாகிரகிகள் ஆகுங்கள், தேசிய இலக்கியம் திருக்குறள், தமிழ்மொழியை கட்டயாமாக்க என்ன வழி?, நாடும் மொழியும், வேளாண்மை வேறு இந்தியா வேறு அல்ல, படிக்கும் போதே உழைப்பு, மேதகு அப்துல் கலாமின் 10 உறுதி மொழிகள் போன்ற கட்டுரைகளும் உள்ளடங்கியிருந்தன.
அந்நூலில் அரசியல், பொருளாதாரம், தேசியம், வேளாண்மை, நதிநீர் இணைப்பு, பள்ளிக்கல்வி முறை, தொல்காப்பியம், திருக்குறள், தமிழிசை, தமிழ் மொழி, உலகமயம், தாராளமயம் போன்ற பல தலைப்புகளில் மகாலிங்கம் உயரிய கருத்துக்களை வழங்கியுள்ளார்.
ஒரு கட்டுரையில் புத்தகத்திற்கு ஏன் நூல் என பெயர் வந்ததை, இரம்பத்தால் மரத்தை அறுக்க நூலால் கோடு போடுவார்கள். அப்படிச் செய்தால்தான் கோணலாகாமல் நேராக அறுக்க முடியும். இதே போல மனித மனம் கோணலாகாமல் நேராக இருக்க, புத்தகம் பயன்படுவதால் புத்தகத்திற்கு “நூல்” என்று பெயர் வைத்தனர் நமது பெரியோர்கள் எனக் கூறியிருந்த விளக்கம் என் மனதிற்கு மிகவும் பிடித்தது.
- வைரமணி