/

இரண்டாண்டுகளில் இல்லாத அளவு தேசிய பங்குச் சந்தையில் எழுச்சி

தேசிய பங்குச் சந்தையில் கடந்த 28 மாதங்களில் இல்லாத அளவுக்குப் புள்ளிகள் உயர்ந்தன.

News image
Updated On :11 மே 2013, 6:21 pm

தேசிய பங்குச் சந்தையில் கடந்த 28 மாதங்களில் இல்லாத அளவுக்குப் புள்ளிகள் உயர்ந்தன. அன்னிய முதலீட்டு நிறுவன முதலீடு அதிகரித்ததே இந்த உயர்வுக்குக் காரணமாகும். மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை ஆகிய இரண்டும் சனிக்கிழமை ஒன்றரை மணி நேரம் (11.15 முதல் 12.45 வரை) செயல்பட்டன.

பேரிடர் மேலாண்மை நிர்வாகம் எப்படிச் செயல்படுகிறது என்பதை சோதிப்பதற்காக சனிக்கிழமை இவ்விரு பங்குச் சந்தைகளும் செயல்பட்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் கடந்த வாரத்தில் 20 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து 20,122 புள்ளிகளைத் தொட்டது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் 6,107 புள்ளிகளாக இருந்தது.

தொழில்துறை உற்பத்தி அதிகரித்ததும் பங்குச் சந்தை எழுச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது. அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் கடந்த வாரத்தில் ரூ. 4,399 கோடியை முதலீடு செய்திருந்தன.

முக்கியமான 30 நிறுவனப் பங்குகளில் 24 நிறுவனப் பங்குகள் லாபம் ஈட்டின. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வார வர்த்தகம் ரூ. 11,489.92 கோடி. தேசிய பங்குச் சந்தையில் ரூ. 50,502.62 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

ரூபாய் மதிப்பு சரிவு: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடந்த வாரம் சரிவைச் சந்தித்தது. இதனால் ஒரு டாலருக்கு ரூ. 54.80 தர வேண்டியிருந்தது. கடந்த வாரத்தில் மொத்தம் 86 காசுகள் வரை ரூபாயின் மாற்று மதிப்பு சரிவைச் சந்தித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.