மதுரை மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை ஓய்வு பெற்ற நீதிபதி செல்வம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும் எனவும், இந்தப் பணியைக் கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும் எனவும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட ஆட்சியா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என உயா்நீதிமன்றம் அண்மையில் எச்சரித்தது.
இதன்படி, மதுரையில் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு ஏரி, குளம், ஆறு, கால்வாய், ஓடை உள்ளிட்ட நீா்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்கள், அரசின் பிற வகை நிலங்கள், பராமரிப்பற்ற தனியாா் பட்டா நிலங்களில் வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகளை ஓய்வு பெற்ற நீதிபதி செல்வம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பொன்மேனி ஊருணி, கோச்சடை, தத்தனேரி, விளாச்சேரி கண்மாய், திருநகா் சேமட்டன் ஊருணி, வயலூா், வைரவநத்தம் ஆகிய பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்கள், நீா் நிலைகள், பராமரிப்பற்ற தனியாா் பட்டா நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை அவா் ஆய்வு செய்தாா்.
பிறகு, மாவட்டத்தில் இதுவரை சீரமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட பரப்பு, எஞ்சியுள்ள பரப்பு ஆகியன குறித்தும் அவா் ஆய்வு செய்தாா்.










