மத்திய அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடட் (பிபிசிஎல்) ஆகியவை, இயற்கை எரிவாயுப் போக்குவரத்து மற்றும் விற்பனைத் துறையில் களமிறங்க முடிவு செய்துள்ளன.
இதற்காக, இந்தியாவின் இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோகத்தை கவனித்து வரும் "கேஸ் (இந்தியா) லிமிடட்' (கெயில்) நிறுவனத்தை கையகப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவை மட்டுமன்றி, இயற்கை எரிவாயு விற்பனை, விநியோகம், போக்குவரத்து ஆகியவற்றிலும் ஈடுபட்டு, முழுமையான எரிபொருள் நிறுவனமாகச் செயல்பட இந்தியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களான ஐஓசி-யும், பிபிசிஎல்-லும் விரும்புகின்றன.
இதற்காக, கெயில் நிறுவனத்தைக் கையகப்படுத்தி தங்களுடன் இணைத்துக் கொள்ள அந்த நிறுவனம் ஆர்வம் காட்டி வருகின்றன.
எனினும், கெயில் நிறுவனமோ, மத்திய அரசுத் துறையைச் சேர்ந்த ஆயில் அண்டு நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷனுடன் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.
2017-18-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தபோது, அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் சேவைகள் உலகத் தரத்துக்கு இணையாகத் திகழும் வகையில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையிலேயே இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் தங்களது விருப்பத்தைத் தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையே, நிதியமைச்சரின் ஒருங்கிணைப்புத் திட்டத்தின் கீழ், மத்திய அரசுக்குச் சொந்தமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டில் (ஹெச்பிசிஎல்) 51.11 சதவீத பங்குகளை வாங்கி, அந்த நிறுவனத்தைக் கையகப்படுத்தும் தனது விருப்பதையும் தெரிவித்துள்ளது.
எனினும், நிறுவனங்களின் இந்தக் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. நிறுவனங்களின் இணைப்பைப் பொருத்தவரை, அது லாபகரமாகவும், அந்த நிறுவனங்களின் மீதான தனது கட்டுப்பாடு குலையாமலும் இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.