நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப கரோனா காலத்தில் திரையரங்குகள் மூடியிருந்த சூழ்நிலையில், அவற்றுக்கு மாற்றாக ஓடிடி தளங்கள் எழுச்சி பெற்றுள்ளன.
கரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் வீட்டில் முடங்கியிருக்கும் இந்த சூழ்நிலையில் சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி, பெரிய பட்ஜெட் படங்களும் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன.
இதனால் மக்கள் தியேட்டர்களுக்குச் செல்வது குறையும் என்றும் அதன் விளைவாக தியேட்டர்களுக்கான வருமானம் பெருமளவில் பாதிக்கும் என்றும் பேச்சுகள் எழுகின்றன. ஏனெனில் இப்போது ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்காகவே சில படங்களும், தொடர்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
குறைந்த செலவில் வீட்டில் குடும்பத்தினருடன் பார்ப்பது மகிழ்ச்சி என்று ஒரு தரப்பினர் கூறினாலும், மற்றொரு தரப்பினர் தியேட்டர்களுக்குச் செல்வது ஒரு தனி அனுபவம் என்றும் பெரிய படங்களை தியேட்டர்களில் பார்ப்பதுதான் விருப்பம் என்கின்றனர்.
இதுகுறித்து தினமணி ட்விட்டர் தளத்தில், ஓடிடி தளங்களிடமிருந்து திரையரங்குகள் தப்புமா?' என்று மக்களிடம் கருத்து கேட்டதற்கு கீழ்குறிப்பிட்ட முடிவுகள் வந்துள்ளன.
தப்பும் -32.9%
தப்பாது -33.5%
சூழல் முடிவு செய்யும் -33.5%
மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு திரையரங்குகள் சங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் தினமணி யூ ட்யூப் சேனலுக்கு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.