ரஜினி 2.0 18
வருடக் கடைசி நாளில் பரபரப்பைப் பற்ற வைத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கூகிள் முழுவதும் ரஜினி, மந்திரம் போல நீக்கமற நிறைந்துவிட்டார். அவர் நீண்ட காலம் காத்த மெளனம் இன்று கலைந்தது. ரஜினியின் அரசியல் பிரவேசம் ஆணித்தரமாக உறுதியாகிவிட்டது. இது அவர்களது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழக அரசியலில் நல்ல மாற்றம் வேண்டும் என்று விரும்பும் அனைவருக்கும் மகிழ்வளிக்கக் கூடிய செய்தியாகும்.
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த முடிவை நேரில் கேட்க அவரது போயஸ் கார்டன் இல்லம் முன்பும், ராகவேந்திரா திருமண மண்டபத்திலும் ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருந்தனர். பெரும்கூட்டத்தைச் சமாளிக்க போலீஸ் பாதுகாப்பும் பலமாக போடப்பட்டது. இந்நிலையில், தான் தனி கட்சி தொடங்கபோவாதாகவும், அனைத்து தொகுதிகளிலும் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டி இடுவோம் என்றும், பாராளுமன்றத்தில் போட்டி இடுவது குறித்து தேர்தல் சமயத்தில் அறிவிப்பேன் என்றும் பகிரங்கமாக ரஜினிகாந்த் அறிவித்துவிட்டார்.
அதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அவரது முடிவுக்கு ஆதரவு தெரிவித்தும், வாழ்த்துக்களை அனுப்பியும் ரசிகர்கள், பிரபலங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகிறார்கள். சில கடுமையான விமரிசனங்களும் எழுந்து வருகின்றன. நடிகர்கள் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், விவேக், இயக்குனர் லிங்குசாமி உள்ளிட்ட பலர் ரஜினிக்கு உடனடியாக வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
திரைத்துறை பிரபலங்கள் பலர் தொடர்ந்து ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிங்கம் ஒன்று புறப்பட்டதே மற்றும் நெருப்புடா என்ற பாடல் பின்னணியில் தொலைக்காட்சி சானல்கள் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த செய்திகளை ஒளிபரப்பிவருகின்றன. இந்நிலையில், ‘போயஸ் கார்டனில் இருந்து மீண்டும் ஒரு முதல்வர்... வா தலைவ வா வா..!!! என்று ரஜினி ரசிகர் மன்றத்தினரின் டிவிட்டர் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.