பா.ரஞ்சித் இயக்கும் காலா திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடிக்கிறார் என்று செய்திகள் வெளிவந்த நிலையில், காலாவில் தன்னுடைய கதாபாத்திரம் பற்றி ஈஸ்வரி ராவ் எதுவும் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால் சூப்பர் ஸ்டாருடன் நடிப்பதைப் பற்றி தன்னுடைய குழந்தைகளும் குடும்பத்தாரும் மகிழ்ச்சியடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
'என்னுடைய குழந்தைகளும் குடும்பத்தாரும் காலா திரைப்படத்தில் நான் நடிப்பதில் பெருமை அடைந்துள்ளனர். படத்தில் என்னுடைய ரோல் பற்றி எதுவும் இப்போது சொல்ல முடியவில்லை. ஆனால் இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றார் ஈஸ்வரி ராவ்
ஈஸ்வரி ராவ் தெலுங்குப் படங்களில் அதிகம் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் அவரது முதல் படம் இதுதான். மும்பையில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் நடைபெறும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
கபாலிக்குப் பிறகு இரண்டாவது முறையாக சூப்பர் ஸ்டாருடன் கரம் கோர்க்கிறார் பா.ரஞ்சித். குப்பத்தைச் சேர்ந்த நாயகன் சந்தர்ப்ப சூழலால் கேங்ஸ்டராகும் கதை தான் காலா என்கிறார்கள். இதில் ஹுமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி படீல், சமுத்திரகனி, பங்கஜ் திரிபாதி ஆகியோரும் நடிக்கின்றனர். தனுஷும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ளது.