
சென்னை: ஒளிப்பதிவாளர், இயக்குநர் விஜய் மில்டனின் இயக்கத்தில் உருவாகி வரும் 'கோலி சோடா-2' படத்தில் கோலிவுட்டின் முன்னணி இயக்குநர் ஒருவர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது.
ஒளிப்பதிவாளர், இயக்குநர் விஜய் மில்டனின் இயக்கத்தில் உருவாகி 2014-ஆம் ஆண்டு வெளிவந்து பெருவெற்றி பெற்ற படம் 'கோலி சோடா'. தற்பொழுது அதன் தொடர்ச்சியாக கோலி சோடா-2 வினை இயக்குநர் விஜய் மில்டன் உருவாக்கி வருகிறார். வாலிபால் மற்றும் இதர விளையாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு 'ஸ்போர்ட்ஸ் மூவியாக' இது உருவாகி வருகிறது. நடிகர் கிஷோர், இயக்குனர் சமுத்திரக்கனி மற்றும் விஜய் மில்டனின் சகோதரர் பரத் சீனி உள்ளிட்டோர் இதில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்பொழுது இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் இயக்குனர் கெளதம் மேனன் நடிக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இயக்குனர் தரப்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:
விஜய் மில்டன் இந்த கதாபாத்திரத்தினை உருவாக்கும் பொழுதே இதனை கெளதம் மேனன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து உருவாக்கினார். அதற்காக அவரை நாங்கள் அணுகிய பொழுது அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். இது சாதாரண ஒரு கதாபாத்திரம் அல்ல; கதையினை முன்னகர்த்தி செல்லும் வகையில் அந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 60% படப்பிடிப்பு முடிந்து விட்டது. இறுதி ஷெட்யூல் நடந்து வருகிறது. அநேகமாக கெளதம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டி இருக்கும்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில வாரங்களுக்குமுன்னர் வெளியான கோலி சோடா-2 படத்தின் டீசரில் கெளதம் மேனன் வாய்ஸ் ஓவர் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.