பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த ஹீரோ யார்?

எஸ்.எஸ்.ராஜமெளலியின் இயக்கத்தில் வெளியாகி உலகெங்கும் சூப்பர் ஹிட்டானது 'பாகுபலி 2'.
பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த ஹீரோ யார்?
Published on
Updated on
2 min read

எஸ்.எஸ்.ராஜமெளலியின் இயக்கத்தில் உலகெங்கும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது 'பாகுபலி 2'. ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகராக பிரமாண்டமான காட்சிகளும், மிகச்சிறப்பான ஒளிப்பதிவும் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாட வைத்த முக்கியமான விஷயம். ரிபீடட் ஆடியன்ஸ் அதிகம் பெற்ற படம் பாகுபலி என்கிறது ஒரு புள்ளி விபரம். இதுவரை கிட்டத்தட்ட ரூ.1700 கோடியை வசூலை அள்ளிக் குவித்த இந்திய திரைப்படமாக புதிய சாதனை படைத்தது பாகுபலி. 

இத்தகைய புகழுக்குச் சொந்தக்காரரனான ராஜமெளலி தனது அடுத்த படத்துக்கான வேலைகளுக்குத் தயாராகி வருகிறார். இந்தப் படத்துக்காக, தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இருந்து நடிகர்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளாராம். மேலும் படத்தை மூன்று மொழிகளிலும் நேரடியாக எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம். 

இதற்கிடையில் ராஜமெளலியின் அடுத்த பட ஹீரோ யார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக அனைவரையும் ஆர்வத்துக்குள்ளாக்கி இருக்கிறது.  அடுத்து அவர் திரைப்படத் தயாரிப்பாளர் டிவிவி தனய்யாவின் படமொன்றை இயக்கவிருக்கிறார் என்ற செய்திகள் வெளிவந்தன. இந்தப் படத்தின் டைட்டில் இன்னும் முடிவாகாத நிலையில், அது சமூகப் படம் வகைமையில் இருக்கும் என்கிறது ராஜமெளலி வட்டாரம். 

அந்தப் படத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது.  நடிகர்களைவிட, அவர்களுடைய ரசிகர்களுக்கிடையே சமூக வலைத்தளங்களில் பலமாக சர்ச்சை நடந்து வருகிறது. ஒரு பக்கம் ஜூனியர் என்.டி.ஆர். ரசிகர்களும் இன்னொரு பக்கம் மகேஷ் பாபு ரசிகர்களும், ராஜமெளலியின் அடுத்த படத்தில் நடிக்கப் போவது தங்களுடைய ஹீரோ தான் என்று சண்டையிட்டு வருகின்றனர். இந்நிலையில் டோலிவுட்டின் லேட்டஸ்ட் பரபரப்புச் செய்தி, சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ராஜமெளலியின் அடுத்த ஹீரோவாகிறார் என்பதுதான். இதை மகேஷ் பாபுவே சமீபத்தில் நடந்த ஒரு பிரஸ் மீட்டில் கூறியிருக்கிறார். 

'ஸ்படைர்' படத்தின் ப்ரொமோ நிகழ்வொன்றுக்காக பேசுகையில் இச்செய்தியினை மகேஷ் பாபு மீடியாவிடம் தெரிவித்துள்ளார். மேலும் அந்தப் படத்தின் ஷூட்டிங் 2018-ம் ஆண்டு இறுதியில் தொடங்கி 2019-ம் ஆண்டில் நிறைவடையும் என்றும் கூறினார். 

தற்போது மகேஷ் பாபு டோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களின் மூன்று படங்களில் நடித்துவருகிறார். இயக்குனர் கொரடால சிவாவின் த்ரில்லர் படமான பரத் அனே நேனு படம்தான் மகேஷ் பாபு நடிப்பில் அடுத்து திரைக்கு வரவுள்ளது. அதற்கடுத்து வம்சியின் 'மகேஷ் 25' என்ற படத்திலும், திரிவிக்ரம் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத ஒரு படத்திலும் மகேஷ் பாபு நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள முதல் தமிழ்ப்படம் ஸ்பைடர் விரைவில் வெளிவர உள்ளது. மகேஷ் பாபு அந்தப் படத்தையும் தன் வெற்றிப் பட வரிசையாக மிகவும் எதிர்ப்பார்த்து வருகிறார்.

படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் இன்னும் முடிவாலவில்லை. இந்நிலையில் மகேஷ் பாபு தான் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தை ராஜமெளலி இயக்குகிறார் என்றதும் டோலிவுட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், தன்னுடைய அடுத்த படம் குறித்து எந்த அறிவிப்பையும் எஸ்.எஸ்.ராஜமெளலி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com