விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக நடிகை பிந்து மாதவி அறிமுகம் ஆகியுள்ளார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது ஏன் என கமலிடம் பிந்து மாதவி உரையாடியபோது கூறியதாவது:
உலகம் முழுக்க இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள். நானும் தினமும் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்துவருகிறேன். ஒரு ரசிகராக ரசித்துப் பார்த்துள்ளேன். இருநாள்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறித்து முடிவெடுத்தபிறகு... இப்போது குழப்பமாக உள்ளது.
நான் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒருவாரம் தான் பார்த்தேன். ஆனால், தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியைத்தான் மிகவும் ரசித்துப் பார்த்தேன். ஒருநாள் கூடத் தவறவிட்டதில்லை.
நான் கடந்த இரு வருடங்களாகச் சொந்தக் காரணங்களுக்காகப் படங்களில் நடிக்கவில்லை. சமீபத்தில்தான் மீண்டும் நடிக்க ஆரம்பித்தேன். அந்தப் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அதனால் இப்போது உள்ள ஓய்வு நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ் ரசிகர்களுடன் நெருக்கமாகலாம் என்பதற்காகக் கலந்துகொண்டுள்ளேன்.
ஜெயிப்பதற்கான உத்தி எதுவும் என்னிடம் இல்லை. எல்லோரிடமும் சாதாரணமாகப் பழகப் போகிறேன். நான் எல்லோரையும் டிவியிலேயே பார்த்துவிட்டேன். ஒருவர் மட்டும் தவறு செய்கிறார் என்று சொல்லமுடியாது. போட்டியாளர்களில், ஓவியா எனக்குச் சவாலாக இருப்பார் என நினைக்கிறேன். இந்தக் குடும்பத்திலுள்ள யாரைப் பார்த்தும் எனக்குப் பயமில்லை. திறந்த மனதுடன் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். ரசிகர்கள் ஏற்கெனவே அவர்கள் மனத்தில் சிலருக்கு இடம்கொடுத்துவிட்டார்கள். நான் வெளியாள். எனவே இதை என்னுடைய பலவீனமாகத் தற்போது நினைக்கிறேன் என்றார்.