பிரபல பாடகர் எஸ்.பி.பி.-யின் உடல்நிலை மோசமாக உள்ளதால் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில், வீடியோ பதிவின் வழியாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:
என் உடல்நிலை குறித்து சமீபகாலமாக ஏராளமான விசாரிப்புகள் வருகின்றன. என் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகச் சமூகவலைத்தளங்களில் எழுதப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். என் இசை நிகழ்ச்சிகளையும் அதனால் ரத்து செய்துள்ளதாக கூறுகிறார்கள். இருமல், சளி பிடிப்பது போன்ற சிறிய உபாதைகளுக்காக ஒருவேளை நான் மருத்துவரைப் பார்க்கச் செல்லும்போது அங்கு என்னைப் பார்ப்பவர்கள் என் உடல்நிலை மோசமானதாக எண்ணுவது முட்டாள்தனம். நான் இசை நிகழ்ச்சிகளை ரத்து செய்ததற்குக் காரணம், நான் என் இளைய சகோதரியைச் (கிரிஜா) சமீபத்தில் இழந்துள்ளேன். அதற்காக 10, 12 நாள்கள் அங்கு இருக்கவேண்டியிருந்தது.
செப்டம்பர் 2 அன்று பெங்களூரில் என்னுடைய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபோன்ற வதந்திகளைத் தேவையின்றிப் பரப்பி பலரையும் காயப்படுத்துபவர்களின் உள்நோக்கம் எனக்குப் புரியவில்லை. இதைச் செய்யவேண்டாம். அதனால்தான் கடந்த சில நாள்களாக என் ஃபேஸ்புக் பக்கம் வருவதில்லை.
என் நலம்விரும்பிகளுக்கு.. நான் நலமாக உள்ளேன். ஹைதரபாத்தில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளேன். இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவர்களைக் கடவுள் வாழ்த்தட்டும் என்று கூறியுள்ளார்.