மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனை கட்சியை நிறுவிய பால் தாக்கரே, கடந்த 2012-ம் ஆண்டு உயிரிழந்தார். இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.
இந்நிலையில் பால் தாக்கரேவின் வாழ்க்கை வரலாறு, தாக்கரே என்கிற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. சிவசேனை கட்சியின் எம்.பி.-யுமான சஞ்சய் ரெளத் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இயக்கம் - அபிஜித் பன்சே. நவாசுதீன் சித்திக், தாக்கரே வேடத்தில் நடித்துள்ளார். ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளில் ஜனவரி 25 அன்று வெளிவரவுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மண்ணின் மைந்தர்களுக்கே என்கிற சிவசேனைக் கட்சியின் கொள்கையைப் பிரதிபலித்த டிரெய்லருக்குப் பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்த டிரெய்லர் குறித்து நடிகர் சித்தார்த் கூறியதாவது:
தென் மாநில மக்கள் மீதான எதிர்ப்புணர்வை இந்தப் படம் வெளிப்படுத்துகிறது. தென்னிந்தியரை மோசமாகப் பேசிய மனிதரை இந்தப் படம் கொண்டாடுகிறது. இந்தப் பிரசாரம் மூலமாகப் பணம் சம்பாதிக்க எண்ணுகிறீர்களா? வெறுப்புணர்வை வியாபாரமாக்குவது அச்சமூட்டுகிறது. மராத்தி டிரெய்லர் செளகரியமாக சப் டைட்டில் செய்யப்படவில்லை. ஹீரோயிஸம் போல வெறுப்புணர்வு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மும்பையைச் சிறந்த நகரமாக மாற்றிய தென்னிந்திய மக்களின்மீது ஆதரவு தெரிவிக்கவில்லை என்று தன் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.