சென்னை: மன்மதன், சரவணா மற்றும் செக்கச் சிவந்த வானம் படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக ஜோதிகாவுடன் இணைந்து சிம்பு நடிக்க உள்ளார்.
சிம்பு மற்றும் ஜோதிகா ஜோடி முதன்முறையாக ‘மன்மதன்’ திரைப்படத்தில் நடித்தனர். பிறகு சரவணா படத்தில் இணைந்து நடித்தார்கள். அதைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர்கள் இருவரும் தற்பொழுது மணிரத்னம் இயக்கி வரும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி இசை கோர்ப்பு மற்றும் பிற வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நான்காவது முறையாக ஜோதிகாவுடன் இணைந்து சிம்பு நடிக்க உள்ள தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `தும்ஹரி சூளு' படத்தின் தமிழ் ரீமேக் 'காற்றின் மொழி' என்ற பெயரில் உருவாகி வருகிறது. ராதா மோகன் இயக்கும் இந்தப் படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடிக்கிறார். இந்தியில் நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன் ராமன், உமா பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடித்திருக்கிறார் சமீபத்தில் இதற்கான படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், அதுதொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.