கேரளாவில் பிரபல ஆர்ஜேவான ராஜேஷ் என்பவரை மர்ம நபர்கள் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகன் ராஜேஷ் என்று அழைக்கப்படும் அவருக்கு 36 வயதாகிறது. அவர் ஒரு பிரபல மிமிக்ரி ஆர்டிஸ்ட் மற்றும் நாட்டுப்புற பாடகர். ரெட் எஃப்எம்மில் வேலை செய்தவர்.
நேற்று இரவு (திங்கள் கிழமை) திருவனந்தபுரத்திலுள்ள தனது சொந்த ஸ்டுடியோவான மெட்ரோ ரேடியோ நிலையத்தில் தனது நண்பர் குட்டன் என்பவருடன் இருந்தார். அப்போது சிவப்பு நிற மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ஆயுதங்களால் அவர்கள் இருவரையும் தாக்கினர். அதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், அவரது நண்பர் குட்டன் படுகாயமடைந்துள்ளார். இந்தக் கலவர சத்தம் கேட்டு ஸ்டுடியோவின் அருகே இருந்தவர்கள் போலிஸுக்கு உடனடியாகத் தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த போலீஸார் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜேஷ் இறந்துவிட்டதால், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்தக் குற்றச் சம்பவத்தை வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸ் விசாரணையை தொடங்கி உள்ளனர். மறைந்த ராஜேஷுக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். ராஜேஷின் ரசிகர்கள் அவரது கொடூர மரணச் செய்தி அறிந்து வருத்தம் அடைந்தனர்.