பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் ராதா கிருஷ்ணா இயக்கியுள்ள படம் - மணிகர்ணிகா. ஜான்சி ராணி லட்சுமிபாயின் கதையே மணிகர்ணிகா என்கிற படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஜான்சி ராணியின் இயற்பெயர் - மணிகர்ணிகா. இந்திய விடுதலைப் போரில் முக்கியப் பங்காற்றிய ஜான்சி ராணி, ஆங்கிலேயருக்கு எதிரான போரில் வீர மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது - 29.
இப்படத்துக்கு இசை - ஷங்கர் - இஷான் - லாய். ராணி லட்சுமிபாய் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து பாகுபலி படங்களின் கதாசிரியரான விஜயேந்திர பிரசாத் இப்படத்துக்குக் கதை, திரைக்கதை அமைத்துள்ளார்.
இந்த படத்தில் கங்கணா ரூ.14 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக பாலிவுட் மீடியாவில் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்திய நடிகைகள் எவரும் இதுவரை இத்தகைய சம்பளம் பெற்றது இல்லை. இதற்குக் காரணம் பொதுவாக ஹிந்திப் படங்களுக்கு உலகளாவிய வணிகம் உள்ளது. பாலிவுட் நடிகர், நடிகைகள் பலருக்கு உலகளாவிய ரசிகர்கள் உள்ளனர். பிரியங்கா சோப்ரா, எமி ஜாக்ஸன் உள்ளிட்ட சிலர் ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரியலில் நடித்து வருகின்றனர். பெரிய அளவில் சம்பளம் வாங்குகிறார்கள்.
கடந்த வருடம் இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் தீபிகா படுகோன் ரூ.13 கோடி பெற்று முதல் இடத்தில் இருந்தார். இவர் நடித்து வெளி வந்த பத்மாவத் படம் ரூ.215 கோடி செலவில் தயாராகி ரூ.580 கோடி வசூல் பார்த்தது. கங்கனா ரணாவத் ரூ.12 கோடி பெற்று இரண்டாவது இடத்தில் இருந்தார்.
கங்கனா ரணாவத் நடித்த க்வீன் படம் வசூல் சாதனைகள் நிகழ்த்தியது. சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் அவருக்கு பெற்றுக் தந்தது. அதன் பின் தனது சம்பளத்தை கூட்டி, தற்போது ரூ.14 கோடி பெற்றுள்ளார் கங்கனா ரணாவத். இந்தியாவில் அதிகளவு சம்பளம் பெரும் நடிகை என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது.