வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதபோதும் நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாக்கைப் பதிவு செய்த விவகாரம் தொடர்பாக தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.
தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்பட 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசமான புதுச்சேரி என ஒட்டுமொத்தமாக 95 மக்களவை தொகுதிகளில் கடந்த வாரம் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது.
தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றபோது, தென் சென்னை மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த விருகம்பாக்கம் சட்டமன்றத்தொகுதியில் சாலிகிராமத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாக்கினைப் பதிவு செய்தார். அவர் வாக்குப் பதிவு செய்தபோது வாக்குச்சாவடியில் சர்ச்சை ஏற்பட்டது. வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லாததால் சிவகார்த்திகேயன் தனது வாக்கினை முதலில் செலுத்தவில்லை. இரண்டு மணி நேரம் கழித்து அதே வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார் சிவகார்த்திகேயன். கடந்த தேர்தலின்போது வாக்குப்பதிவு செய்த சிவகார்த்திகேயன், அப்போது பயன்படுத்திய வாக்காளர் அடையாள அட்டையை இந்த முறையும் எடுத்து வந்துள்ளார். எனினும் புதிய வாக்காளர் பட்டியலில் அவருடைய பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதபோதும் வாக்காளர் அடையாள அட்டையைக் கொண்டு அவர் வாக்குப்பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்ச்சை எழுந்தது.
இதுதொடர்பாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்ததாவது: இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் அலுவலரிடம் விசாரணைக்கு உத்தவிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத சிவகார்த்திகேயன் தனது வாக்கைப் பதிவு செய்ய தேர்தல் அலுவலர் அனுமதித்துள்ளார். இதனால் தேர்தல் நடத்திய அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இதுதொடர்பாக முழுமையான விசாரணை நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.